பிள்ளையானின் வழக்கறிஞராக கம்மன்பில : கடந்தகால குற்றங்களின் தீவிரத்தன்மை அம்பலம்
பிள்ளையானின் வழக்கறிஞராக உதய கம்மன்பில நியமிக்கப்பட்டதன் மூலம் கடந்த காலங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் கொலைகள் எவ்வளவு தீவிரமானவை என்பது தெளிவாகின்றது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பிள்ளையானுக்காக கம்மன்பில முன்னிலை
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் உதய கம்மன்பில வழக்குகளுக்காக முன்னிலையாகியமை பொதுமக்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஆனால், பிள்ளையான் தனது வழக்கறிஞராக கம்மன்பிலவைத் தேர்ந்தெடுத்துள்ளார். பிள்ளையானின் வழக்கையும் கம்மன்பில கையில் எடுத்துள்ளார்.
இவை வெறும் அரசியல் படுகொலைகள் அல்ல. இவை ஒரு பெரிய வலையமைப்புக்குள் செயற்படுத்தப்பட்ட விடயங்களாகும். தற்போது இந்த நூல் பந்து கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்ந்து வருகின்றது.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இப்போது சுறுசுறுப்பாகி, முன்னர் மறைக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுத்து வருகின்றது. குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் பணியைத் தொடங்குகின்றது. அனைத்து சட்டத் தேவைகளும் தொடர்புடைய நிறுவனங்களால் பூர்த்தி செய்யப்படுகின்றன. அதற்கு அரசு தேவையான வசதிகளை மட்டுமே வழங்கி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.