வட்டுக்கோட்டையின் அரசியல் முக்கியத்துவம்! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 வது வருட நினைவு நிகழ்வுகள் வடக்கு – கிழக்கு எங்கும் நிகழ்த்தப்பட்டன. இதன் இறுதி நிகழ்வு “வட்டுக்கோட்டை 50 எழுச்சிமாநாடு” என்ற தலைப்பில் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடாத்தப்பட்டது.
பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், மதத்தலைவர்களும் வட்டுக்கோட்டைத் தீரமானம் பற்றிய தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் இடம் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.1972 ஆம் ஆண்டு திருகோணமலையில் உருவாக்கப்பட்ட தமிழர் கூட்டணி தமிழர் விடுதலைக் கூட்டணியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டமையும் இந்த மாநாட்டிலேயே இடம்பெற்றது.
வட்டுக்கோட்டை தீர்மானம்
வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழர் அரசியல் வரலாற்று பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடாகும் தமிழர் வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத தீர்மானமாகவே இது எழுச்சி கண்டது. ஏனைய முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்ட நிலையிலேயே இத் தீர்மானம் முன்னிலைக்கு வந்தது. சுதந்திர தமிழீழக் குடியரசினை அமைத்தல் என்பதே வட்டுக்கோட்டை தீர்மானத்தின் முக்கிய அம்சமாகும்.
தொடர்ச்சியான திட்டமிட்ட இன அழிப்பும், பேரினவாத செயற்பாடுகளுமே இத்தீர்மானத்திற்கு காரணங்களாக அமைந்திருந்தன. தமிழ் மக்கள் வரலாற்றில் எடுத்த எடுப்பில் வட்டுக்கோட்டைத் தீர்;மானத்திற்கு வரவில்லை. பேரினவாதமே அத் தீர்மானத்திற்கு தமிழ் மக்களை தள்ளியிருந்தது.

நீண்ட வரலாற்றின் ஒரு கட்டத்தில் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வந்திருந்தனர.; நவீன தமிழர் வரலாற்றின் முதலாவது காலகட்டம் 1833 ஆம் ஆண்டிலிருந்து 1921 ஆம் ஆண்டு வரை அமைந்தது. இக்காலகட்டத்தில் தமிழ் மக்கள் இன அரசியலையே நகர்த்தியிருக்கவில்லை.
அரசியல் களத்தில் தமிழ் மக்கள் “இலங்கையர்”;; என்ற அடையாளத்தையே பேணினர். பண்பாட்டுத்தளத்தில் தான் தமிழர்கள் என்ற அடையாளத்தைப் பேணினர். சட்டசபைக்கான பிரதிநிதித்துவப் பிரச்சினையில் எழுத்துமூல உத்தரவாதத்தை ஏமாற்றிய நிலையிலேயே சேர்.பொன்.அருணாசலம் தமிழர் மகாசபையினை உருவாக்கி இன அரசியலை நகர்த்தினார்.
தமிழர் மகா சபையின் தோற்றத்துடன் தமிழர் அரசியலின் இரண்டாவது காலகட்டம் உருவாகியது. அருணாசலம் இதனை உருவாக்கினாலும் அதனை நகர்த்தியவர் ஜீ.ஜீபொன்னம்பலம் தான். 1944 ம் ஆண்டு அவரால் உருவாக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சி இந்தக் காலகட்டத்தை முன்னெடுத்தது.
இந்தக் காலகட்டத்தில் இலங்கையின் ஒற்றையாட்சி கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு அதற்குள் சம வாய்ப்புகளை கோருகின்ற அரசியலே தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 50: 50 கோரிக்கை இந்த அடிப்படையிலேயே எழுச்சி யடைந்தது.
1944 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சோல்பரி குழுவினர் முன்னிலையிலும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் 50:50 கோரிக்கையினையே முன் வைத்தார். 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இது பெரும்பான்மைவாத அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தை சிங்கள தரப்பிடம் ஒப்படைத்தது. 1948 ஆம் ஆண்டின் சுதந்திரமும் அதனை உறுதி செய்தது.
இந்த நிலையில்தான் தந்தை செல்வா 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கி சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் தாயகம், தேசியம்,சுயநிர்ணயம் என்ற கருத்துக்கள் முன்னிலைக்கு வந்தன.
தமிழர் அரசியலின் மூன்றாவது கட்டம் இதுவாகும்.மக்களை இணைத்த போராட்டங்கள் தமிழர் தாயகமெங்கும் இடம் பெற்றன. இதன் விளைவாக சமஸ்டிக் கோரிக்கைக்கு கிட்டவராத நிலையில் பண்டா - செல்வா ஒப்பந்தம் (1957) டட்லி - செல்வா ஒப்பந்தம் (1965) என்பன நிறைவேற்றப்பட்டன. ஒன்று கிழித்தெறியப்பட்டது. மற்றயது கிடப்பில் போடப்பட்டது. மறுபக்கத்தில் அரசு அதிகாரக் கட்டமைப்பு முழுமையாக சிங்கள மயமாக்கப்பட்டது.
குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை - வெளியாகியுள்ள புதிய தகவல்
சிங்களக் குடியேற்றத் திட்டங்கள்
மறுபக்கத்தில் அரசு அதிகாரக் கட்டமைப்பு முழுமையாக சிங்கள மயமாக்கப்பட்டது. அதேவேளை தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை தடுக்கும் வகையில் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிங்களம் அரசகரும மொழிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில்தான் தமிழ் இளைஞர்கள் சமஸ்டிக் கோரிக்கையும் சரிவராது. தனி நாடு அமைப்பதே ஒரே வழி என்ற தீர்மானத்திற்கு வந்தனர். அதற்காக 1968 ம் ஆண்டு ஈழத்தமிழர் இளைஞர்; இயக்கத்தினை உருவாக்கி தனி நாட்டுத் தீர்மானததை நிறைவேற்றினர். தொடர்ந்து இத் தீர்மானம் தமிழ் மாணவர் பேரவை (1970)இ தமிழ் இளைஞர் பேரவை (1973) என்பவற்றினால் முன்னெடுக்கப்பட்டது.

1974 ம் ஆண்டு “புதிய தமிழப் புலிகள்”; என்ற பெயரில் தனி நாட்டு கோரிக்கையை முன்வைத்து ஆயுத இயக்கம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஆயுத இயக்கங்கள் உருவாக்கப்பட்டு தமிழ் ஈழக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களும் அக்கோரிக்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டனர்.
தமிழ் மக்கள் தமிழ் ஈழக் கோரிக்கையினால் முழுமையாகக் கவரப்பட்ட நிலையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டு எட்டு வருடங்களின் பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் நிறைவேற்றப் படாவிட்டால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இருப்பே அழிந்து விடும் என்ற நிலையே அன்றைய காலகட்டத்தில் இருந்தது.
1977 ஆம் ஆண்டு தேர்தலை தமிழ் ஈழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என தமிழர் விடுதலைக்கூட்டணி பகிரங்கமாக அறிவித்தது. மக்களும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான ஆணையினை வழங்கியிருந்தனர். வடக்கு - கிழக்கிலுள்ள தமிழ்த்; தொகுதிகளில் கல்குடா தேர்தல் தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றியீட்டியது.
கல்குடா தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட தேவநாயகம் வெற்றி பெற்றார். தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினாலும் அதற்கு ஒரு போதுமே விசுவாசமாக இருந்ததில்லை. 1977 ஆம் ஆண்டு தேர்தலின் போதே தமிழர் விடுதலைக் கூட்டணியில் அங்கம் வகித்த அகில இலங்கைத் தமிழ்க்; காங்கிரசின் ஒரு பகுதியினர் குமார் பொன்னம்பலம் தலைமையில் வெளியேறி தனித்துப் போட்டியிட்டனர். இதனால் ஒருங்கிணைந்த கோரிக்கை என்ற பண்பு குழப்பப்பட்டது.
கோரிக்கையை பலமாகவைக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால் குமார் பொனனம்பலத்தையும் அழைத்து சென்றிருக்கலாம். தமிழரசுக் கட்சியின் பெரியண்ணன் பாத்திரம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இன்னோர் பக்கத்தில் தனிநாட்டுக் கோரிக்கை மலையக மக்களுக்கு பொருந்தாது எனக் கூறி தமிழர் விடுதலைக் கூட்டணியின் முப்பெரும் தலைமையிலிருந்து தொண்டமான் வெளியேறினார்.
தமிழ் ஈழக் கோரிக்கையின் தொடக்க நிலையிலேயே தொண்டமான் வெளியேறியிருக்கலாம் அல்லது தொண்டமானின் நிலையை அறிந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தொண்டமானை தவிர்த்திருக்கலாம்.முப்பெரும் தலைவர்களாக மாநாட்டில் அறிவித்த பின் தொண்டமான் விலகியமை ஒருங்கிணைந்த குரலை பலவீனப்படுத்தியது.
1977 தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மோசமாக தோல்வியடைந்ததால் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்தது. அ. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது இலங்கையின் அரச அதிகாரக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு முழு இலங்கைத் தீவுக்குமாக செயற்படும் ஒரு பதவியாகும். இப்பதவி வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு எதிரானது. இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி வட்டுக்கோட்டை தீர்மானத்தை பலவீனப்படுத்தியது.
பொது நூலகம் எரிப்பு
1981ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதனை ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டது. இந்த் தேர்தலின் போது தான் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது. மேளதாளங்களுடன் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்தச் சபைகளினால் தமிழர் அபிலாசைகளில் ஒரு துரும்பைக் கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை. மாவட்ட அபிவிருத்திச் சபைகளும் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு முரணானது. தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளார்ந்தமாக அதனை ஏற்றுக் கொண்டமை வட்டுக்கோட்டை தீர்மானத்தைப் பலவீனப்படுத்தியது. இவ்வாறு தொடர்ந்து பலவீனப்படுத்தியமைக்கு காரணம் அத்தீர்மானத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி விசுவாசமாக இல்லாததேயாகும்.

மறுபக்கத்தில் விடுதலை இயக்கங்கள் வளர்ச்சியடையத் தொடங்கின. உண்மையில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நடைமுறையில் கொண்டு சென்றது விடுதலை இயக்கங்கள் தான். 1983க்கு பின்னர் தமிழர் அரசியல் முழுமையாக விடுதலை இயக்கங்களின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியினையில் பெரும்பாலானோர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இதன் பின்னர் 2009 வரை மிதவாத அரசியலுக்கு தமிழ் அரசியலில் பெரிய பாத்திரம் இருக்கவில்லை.
வட்டுக்கோட்டை தீர்மானத்தை நடைமுறையில் தமிழர் விடுதலைக் கூட்டணி பலவீனப்படுத்தினாலும் அது பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று வரை அந்த முக்கியத்துவம் நிலை பெற்று நிற்கின்றது. அதில் முதலாவது தமிழர் அரசியலின் மிதவாதத் தலைமை அதனை நிறைவேற்றியமையாகும். இதனால் இத்தீர்மானம் ஒருங்கிணைந்த கோரிக்கை என்ற பலத்தை பெற்றது.
தமிழ் ஈழத் தீர்மானத்தை இளைஞர்கள் 1968ஆம் ஆண்டே நிறைவேற்றினாலும் மிதவாதத் தலைமையின் அங்கீகாரத்தையும் பெற்றதாக இருக்கவில்லை. இளைஞர்களின் தீர்மானமாகவே இருந்தது. இது ஒரு வகையில் தீவிரவாதிகளின் கோரிக்கையாகவே பார்க்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏற்றுக்கொண்ட பின் ஒட்டுமொத்தத் தமிழர் மக்களின் கோரிக்கையாக எழுச்சியடைந்தது.
ஆயுதப் போராட்ட காலத்தில் மிதவாதத் தலைமை வெளிப்படையாக ஆதரிக்காத நிலைமை நீண்ட காலம் தொடர்ந்திருந்தது. இதனால் ஜனநாயக ரீதியாக மக்களின் சம்மதம் கிடைக்கவில்லை என்ற வாதம் சர்வதேச தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. குமார் பொன்னம்பலம் வெளிப்படையாக ஆயுதப் போராட்டத்தின் அரசியலை அங்கீகரித்த போது அது மிதவாதத் தலைமையின் ஒரு பகுதியினரின் ஆதரவைப் பெற்றதாகக் கருதப்பட்டது.
தமிழத் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதுவும் அதன் அரசியலை ஆதரித்த போதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கை என்ற அந்தஸ்தினை பெற்றது. இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் மக்களின் ஆணையைப் பெற்ற ஒன்றாக இருந்தமையாகும். 1977 ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அந்த ஆணையினை வழங்கியிருந்தார்கள்.
மக்கள் ஆணையைப் பெற்ற அரசியல் கோரிக்கையை சர்வதேச தரப்புக்களும் தட்டிக் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது ஆயுதப் போராட்டத்திற்கு ஒரு ஜனநாயக அரசியல் அந்தஸ்தையும் கொடுத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி அதனைப் பலவீனப்படுத்தியி ருக்காவிட்டால் இந்த அரசியல் அந்தஸ்து மேலும் வலுவடைந்திருக்கும்.
முள்ளிவாய்க்கால்
மூன்றாவது முக்கியத்துவம் ஒடுக்கு முறையின் குறியீடாக வட்டுக் கோட்டைத் தீர்மானம் இருந்தமையாகும். தமிழின ஒடுக்கு முறைக்கு நூறு வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்று அனுபவம் இருந்தது. சேர். பொன் .அருணாசலம் தமிழர் மகாசபையினை உருவாக்கிய 1921 ஆம் ஆண்டிலிருந்து இருந்தது எனலாம்.சுதந்திரத்திற்கு பின்னர் அது அபரிதமாக வளர்ச்சியடைந்தது.
ஆரம்பத்தில் கட்டமைப்பு சார் இன அழிப்பாக இருந்த ஒடுக்குமுறை பின்னர் உயிர் அழிப்பாக மாறியது. நிலப்பறிப்பு, மொழி புறக்கணிப்பு, பொருளாதார சிதைப்பு, கலாச்சார அழிப்பு என கட்டமைப்பு சார் இன அழிப்பு வளர்ந்த அதேவேளை 1958இலும் 1977 இலும் 1983 இலும் அது உயிர் அழிப்பாக மாறியது.

முள்ளிவாய்க்கால் உயிர் அழிப்பு இதன் அது உச்ச நிலை எனலாம். இந்த ஒடுக்குமுறையின் வளர்ச்சி நிலையிலேயே அதிலிருந்து விடுபடுவதற்காக வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வகையில் ஒடுக்கு முறையின் சாட்சியாக வட்டுக்கோட்டை தீர்மானம் இருந்தது எனலாம்.
நான்காவது முக்கியத்துவம் சிறீலங்கா அரசு அனைத்து வழிகளையும் அடைத்து வட்டுக்கோட்டைக்கு மட்டும் வழியைத் திறந்து விட்டுள்ளது. புவிசார் அரசியல் காரணமாக தமிழ் மக்கள் இன்று தமிழீழ கோரிக்கையைத் தவிர்த்து சுயநிர்ணய சமஸ்டி என்ற கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.
ஆனால் அந்தக் கோரிக்கைக்கான பாதைகளை அடைத்து சிறீலங்கா அரசு மீண்டும் வட்டுக் கோட்டைக்கே செல் என வற்புறுத்துகின்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு தவிர்க்க முடியாத வரலாற்றுப் பதிவு. அந்த வரலாற்று பதிவினை மீள் வாசிப்பு செய்வதன் மூலம் இனப் பிரச்சனையின் கனதியை புதிய தலைமுறைக்கு கடத்தக்கூடியதாக இருக்கும்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam