வடகொரியாவின் மிகப்பெரிய அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு
வடகொரியா தனது வரலாற்றிலேயே மிகப்பாரிய அளவிலான புதிய போர்க்கப்பல் ஒன்றை அதிகார பூர்வமாகத் தனது கடற்படையில் இணைத்துள்ளது.
'சோ ஹியோன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 5,000 டன் எடையுள்ள அதிநவீன மல்டிபர்பஸ் போர்க்கப்பல், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது என்று அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம்
மேற்கு துறைமுக நகரான நம்போவில் நடைபெற்ற இந்த போர்க்கப்பல் அர்ப்பணிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய கிம் ஜோங் உன், நமது கடற்படையை அணு ஆயுதங்களால் பலப்படுத்தும் திட்டம் திட்டமிட்டபடி தடையின்றி நகர்வதைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக இப்போர்க்கப்பல் திகழ்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய போர்க்கப்பலானது வான் பாதுகாப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களுடன், தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவக்கூடிய ஏவுகணைகளையும் உள்ளடக்கியுள்ளதாக வடகொரிய அரசு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் கடற்படை பலத்தை கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அசுர வேகத்தில் விரிவுபடுத்தப் போவதாக கிம் ஜோங் உன் உறுதியளித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, நடப்பு ஐந்தாண்டு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு இரண்டு பெரிய போர்க்கப்பல்களைக் கட்டமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், விரைவில் இதைவிடப் பெரிய அளவிலான 10,000 டன் எடையுள்ள மூலோபாயப் போர்க்கப்பல்கள் தொடர்ந்து வரிசையாகக் கடற்படையில் இணைக்கப்படும் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
வடகொரியாவின் இந்த தீவிர இராணுவ நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.