ஐரோப்பிய நாடொன்றில் கொண்டாட்டங்களில் இலங்கையர்களின் ஆபத்தான செயல்- 12 பேர் அதிரடியாக கைது
ஐரோப்பிய நாடான ருமேனியாவில் 12 இலங்கைத் தொழிலாளர்களை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் கும்பலை உருவாக்கியமை மற்றும் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பயன்பாட்டால் இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் ருமேனிய பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதிரடி படையினர் சோதனை
Bucharest, Ilfov மற்றும் Dâmboviţa ஆகிய மாவட்டங்களில் ருமேனிய அதிரடி படையினர் நடத்திய பல சோதனைகளின் பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 12 இலங்கையர்களும் 2024 முதல் ருமேனியாவில் பணி அனுமதிப் பத்திரம் பெற்று வேலை செய்து வந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் சந்தேக நபர்கள் ஒன்றிணைந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.
ருமேனியாவில் உள்ள இலங்கையர்களை இலக்காகக் கொண்டு, அவர்கள் நடத்தும் விழாக்கள் மற்றும் விருந்துகளில் இந்த கும்பல் திட்டமிட்டு போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜுன் 29 முதல் 30ஆம் திகதி வரையிலான இரவில், இந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் 200 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார்.
ஆபத்தான போதைப்பொருள்
அங்கு விற்பனை செய்யப்பட்ட கொகெய்ன், எக்ஸ்டசி மற்றும் மெத்தம்பேட்டமைன் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருள் கலவையைப் பயன்படுத்தியதால், இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தக் கும்பல் தங்களுக்குள் ரகசியக் கூட்டங்களை நடத்தி, போதைப்பொருட்களைப் பாதுகாக்கவும் விற்கவும் பல வீடுகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சர்வதேச அளவில் ரகசியமாக போதைப்பொருட்களைக் கடத்தவும் இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
சோதனைகளின் போது கஞ்சா, கஞ்சா ரெசின், கொகெய்ன், எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் மெத்தம்பேட்டமைன் உள்ளிட்ட பெருமளவிலான தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக ருமேனிய மத்திய புலனாய்வுத் தலைமையகத்தில் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானத்தில் காத்திருந்த வெளிநாட்டு யுவதி - பைக்குள் இருந்த பெறுமதியான பொருள்: அதிரடி கைது