வவுனியாவில் கைத்தொலைப்பேசி திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது
வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கி விட்டு கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை இன்று(24.02.2024) கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் வீதியால் சென்ற போது அவரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த கைத்தொலைபேசியை இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே 17 மற்றும் 38 வயதுடைய இருவர் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருவரும் முதியவரிடம் இருந்து பறித்து சென்ற கைத்தொலைபேசியை வவுனியா நகரப் பகுதியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் கொடுத்து விட்டு மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே கைத்தொலைபேசியை பெற்றுக் கொண்ட மதுபானசாலை ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட கைத்தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |