நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பெரும் பதற்றம்! ஐவர் பலி - பலர் காயம்: அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு
புதிய இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் மூவர் சிறை அதிகாரிகள் என்றும், ஒருவர் கைதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஏராளமான அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சிறைக்கைதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், காயமடைந்த அதிகாரிகளும், கைதிகளும் இன்னும் சிறைக்குள் இருப்பதாகவும், அவர்களை மீட்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மூன்றாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை (06) மீண்டும் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும், மோதலில் காயமடைந்த சுமார் 35 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புப்படையினர் பலமுறை துப்பாக்கிச்சூடு
நிலைமையைக் கட்டுப்படுத்த நீர்கொழும்பு பொலிஸார் மட்டுமின்றி, மிரிகம மற்றும் வெயங்கொட உள்ளிட்ட அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையும் களமிறக்கப்பட்டுள்ள4னர்.
மேலும், கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக பல சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைதிகளால் தாக்கப்பட்டு காயமடைந்த ஆறு சிறை அதிகாரிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் காயமடைந்த சுமார் 20 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை (06) மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் சிறைச்சாலைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்தது.
கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்
விளக்கமறியலில் இருந்த கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே இந்த மோதல் நடந்ததாக பொலிஸார் விளக்கமளித்திருந்தனர்.

இந்த மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பொலிஸாரின் தலையீட்டில் நேற்று நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று காலை மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam