அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 'H5N1' பறவைக் காய்ச்சல் உறுதி
அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸ், ஆபத்தான எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டின் மூன்றாவது மாநிலமாக மாறியுள்ளது.
அங்குள்ள ஹாக்ஸ் நெஸ்ட் என்ற கடலோரப் பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட ஜெய்ண்ட் பெட்ரல் என்ற புலம்பெயர்ந்த கடல் பறவைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த வைரஸ் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல்
அவுஸ்திரேலியாவுக்கு வெளியே உள்ள தீவுகளில் 2025 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய இந்த வைரஸ், கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பை எட்டியது.
தற்போது நியூ சவுத் வேல்ஸ், மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா ஆகிய மூன்று மாநிலங்களில் பரவி மொத்தம் 6 பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் H5 வைரஸ் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை என்றாலும், உள்ளூர் வனவிலங்குகளுக்கோ அல்லது வணிக ரீதியிலான கோழிப் பண்ணைகளுக்கோ இந்த நோய் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என நியூ சவுத் வேல்ஸ் மாநில விவசாயத்துறை அமைச்சர் தாரா மொரியார்ட்டி தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சி மற்றும் முட்டை விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் பொதுமக்கள் அச்சமின்றி வழக்கம் போல் பொருட்களை வாங்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.
இந்த H5 ரகப் பறவைக் காய்ச்சல் உலக அளவில் கோடிக்கணக்கான பறவைகளின் அழிவிற்கும் உணவு விலை உயர்வதற்கும் காரணமாக அமைந்துள்ள சூழலில், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வைரஸ் பரவலைத் தடுக்க தங்களது அரசு முழு வீச்சில் செயல்படும் என உறுதியளித்துள்ளார்.
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam