நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் வன்முறை- பின்னணியில் அரங்கேற்றப்பட்ட சதி அம்பலம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் பின்னணியில் திட்டமிட்ட செயற்பாடு உள்ளதாக தெரியவந்துள்ளது.
சமகால அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் பாதாள உலகக் குழுவினால் திட்டமிட்ட வகையில் வன்முறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய நேற்று முதல் தற்போது வரையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வன்முறை சம்வங்கள் இடம்பெற்று வருகின்றன.
வன்முறை சம்பவம்
நேற்று மற்றும் இன்று இடம்பெறும் வன்முறைச் சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 38 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டுபாயில் மறைந்துள்ள போதைப்பொருள் வர்த்தக கும்பல்களின் ஆதரவாளர்களுக்கு இடையே சிறைக்குள் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவலை அதிகாரிகளுக்கு வழங்கியமையே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள்
தகவல் வழங்கியதாக கருதப்படும் கைதிகள் குழுவை இலக்கு வைத்து, போதைப்பொருள் வர்த்தகத்திற்கு ஆதரவான குழுக்கள் ஒன்றிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சிறைச்சாலைக்குள் கம்புகள் மற்றும் கூரிய ஆயுதங்களைக் கொண்டு கைதிகள் மோதிக்கொண்டமையால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர், நீர்கொழும்பு பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன்போது, சிறைக்கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் சிலர், கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்துள்ளனர்.