தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல்
தமிழ் மக்கள் தமக்குரிய அரசியல் உரிமைகளை பெறுவதற்கு எந்தளவுக்கு விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டுமோ அந்தளவு விட்டுக்கொடுப்புகளை செய்ய தவறவில்லை.
அது மிதவாத அரசியல் தலைமைகளாயினும் சரி, ஆயுதப் போராட்ட தலைமைலாயினும் சரி அவர்கள் தான் கொண்ட இலட்சியத்தில் இருந்து கீழிறங்கி சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டுக் கொடுப்பவர்களை செய்திருக்கிறார்கள்.
இதனை ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட எண்பதுகளில் இருந்து இனம் காண முடியும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை வரித்துக் கொண்ட அரசை கொண்ட ஒரு பெருந்தேசிய வாதம் ஒரு சிறிய தேசிய இனத்தை அடக்குகின்றபோது இரு தரப்புக்கும் ஒரு பேச்சுவார்த்தை அல்லது ஒரு சமாதான முயற்சியில் ஈடுபடுவதற்கு இரு தரப்பும் சமத்துவம் உள்ளவர்களாக முதலில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
பெருந்தேசிய இனம்
அந்த மனப்பாங்கு சிங்கள தேசத்துடன் என்றுமே இருந்ததில்லை. தமிழர் தரப்பு மேற்கொண்ட அனைத்து பேச்சு வார்த்தைகளின் முடிவுகளில் இருந்தும் உணர முடியும். ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்கு ஒடுக்குகின்ற பெரும்பான்மை இனம்தான் விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டுமேயெழிய அளவால் சிறிய தேசியஇனம் விட்டுக்கொடுப்புகளை செய்ய முடியாது.
அவ்வாறு விட்டுக்கொடுப்புகளை செய்தால் அது சிறிய தேசிய இனத்தின் பலவீனம் என கருதி அந்த இனத்தை பெருந்தேசிய இனம் அழித்துவிடும், விழுங்கி விடும் இதுவே எதார்த்தம்.
1980ல் சிங்கள ஆட்சியாளர்கள் முன்வைத்த மாவட்ட சபை தீர்வு திட்டத்தையும் 1981ல் தமிழர் விடுதலை கூட்டணி ஏற்றுக்கொண்டு பெரும் விட்டுக் கொடுப்பவர்களை செய்த போதிலும் அதனைக் கூட நடைமுறைப்படுத்த ஜே.ஆர்்ஜெயவர்த்தனா அரசாங்கம் விரும்பவில்லை.

இதன் பின்னணியில் 1983ம் ஆண்டின் பின்னர் ஆயுதப் போராட்டம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. 1985ம் ஆண்டு யாழ்குடாவை ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.
இலங்கையின் சிங்கள அரசின் இறையாண்மை முதல் தடவையாக யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டு தமிழர் சேனையின் கையில் அந்த இறையாண்மை வந்தது. அதன் பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இலங்கை நாடாளுமன்றத்துக்குள்ளோ, அல்லது இலங்கை தீவுக்குள்ளோ தீர்வு எட்டப்பட முடியாது என்ற நிலை தோன்றியது.
இந்நிலையில் சர்வதேச மேற்பார்வையில் பேச்சுவார்த்தை திம்புவில் இடம்பெற்றது. திம்பு பேச்சு 1985 யூலை 8-13 திகதிகளில் விடுதலைப்புலிகள்(அன்ரன்,திலகர்), ஈ.பி.ஆர்.எல்.எவ்.(வரதராஜா பெருமாள், எல்.கேதிஸ்வரன்), டெலோ(சார்ள்ஸ் என்ரனி தாஸ், மோகன்), ஈரோஸ்(ராஜி சங்கர், ஈ. இரத்தினசபாபதி), புளொட் (வாசுதேவ,தர்மலிங்கம் சித்தார்த்தன்), த.ஐ.வி.மு (சிவசிதம்பரம்,அமிர்தலிங்கம்,சம்பந்தன்) ஆகியோரும் ஆகஸ்டு 12-13திகதிகளில் நடந்த இரண்டாவது கட்டப் பேச்சில் டெலோ சார்பில் மோகனுக்கு பதிலாக நடேசன் சத்தியேந்திராவும் பங்கேற்றார்கள்.
திம்பு கோட்பாடுகள்
தனித் தமிழ் ஈழம் என்றும் தனியரசு என்றும் கொள்கையை முன்வைத்து இலங்கை படைகளுடன் மோதி நூற்றுக்கணக்கான போராளிகள் மரணித்த நிலையிலும் அவர்கள் எந்தக் கொள்கைக்காக மரணித்தார்களோ அந்தக் கொள்கையை இறுக்கமாக பற்றி பிடிக்காமல் தமிழ் மக்கள் நலனுக்காக போராட்ட இயக்கங்கள் விட்டுக் கொடுக்க தயாராகி அந்தப் பேச்சுவார்த்தையில் தனிநாடு என்ற கோரிக்கையை விட்டு இறங்கி சமஸ்டி முறையிலான மாகாண சுயாட்சி தீர்வுக்கு ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் விட்டுக்கொடுப்பை செய்தன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தமிழ் தரப்பு முன்வைத்த அடிப்படை உரிமைகள் 'திம்பு கோட்பாடுகள்' (Thimphu Principles) என அழைக்கப்படுகிறது. இதில் நான்கு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

1)இலங்கையின் தமிழர்களை ஒரு தனித் தேசிய இனமாக அங்கீகரிப்பது. 2)தமிழர்களின் பூர்வீக தாயகத்தை அங்கீகரிப்பதுடன் அதன் பிரிக்க முடியாத தன்மையை உறுதி செய்வது. 3)தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது. 4)இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழங்குவது.
இந்த நான்கு அடிப்படைக் கோட்பாடுகளில் குடியுரிமை தொடர்பான கோரிக்கையைத் தவிர, மற்றவற்றை நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது எனக் கூறி நிராகரித்தது. இந்தப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில் இலங்கை அரசு வவுனியாவிலும், மணலாற்றிலும் மேற்கொண்ட படுகொலைகளும், புதிய சிங்கள குடியேற்றங்களுமே அந்தப் பேச்சுவார்த்தை முறிவிற்கான காரணமாக அமைந்தன.
திம்பு பேச்சுவார்த்தை முடிவு என்பது இலங்கை அரசின் விட்டுக்கொடா தன்மையும் அதனுடைய கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பும், நில அபகரிப்புமே காரணமாகும். புவிசார் அரசியலில் இலங்கைத் தீவின் அரசியலை இந்திய அரசியலை மேவிக்கு செயல்பட ஒருபோதும் முடியாது.
அவ்வாறு இந்தியாவை எதிர்த்து இலங்கை தீவுக்குள் எத்தகைய ஒரு பெரிய புரட்சியையும் செய்து விடவும் முடியாது. ஏனெனில் இந்தியாவின் பாதுகாப்பு எல்லை வலையதுக்குள்ளயே இலங்கை தீவு அமைந்துள்ளது என்ற அடிப்படையில் இந்திய பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருக்கின்ற புள்ளிதான் இலங்கைத் தீவு என்ற அடிப்படையிலும் இந்தியாவின் புவிசார் அரசியல் விருப்பை மீறிய செயலில் மேற்குலகம் ஒருபோதும் ஈடுபடாது.
மேற்குலகத்தவர் ஒருபோதும் ஈடுபடவும் மாட்டார்கள். அதேபோல இலங்கை அரசாலும் இந்தியாவிற்கு எதிராக இலகுவில் எத்தகைய செயல்பாடுகளிலும் ஈடுபட முடியாதவாறு புவிசார் அமைவிட நிர்ணயம் நிர்பந்திக்கிறது. இந்த புவிசார் அமைவிட நிர்ணயத்தின் இயற்கை விதியிலிருந்து ஈழத் தமிழர்களும் விடுபட முடியாது. ஆகவே இந்த இயற்கை நியதிகளை எமக்கு ஏற்றவாறு சாதகமாக கையாள்வதிலேயே தமிழர் தாயக இருப்பும் தமிழ் மக்களின் வளமான வாழ்வுக்கான அடித்தளமும் என்பது தமிழர் போராட்டம் உணரத் தலைப்பபட்டது.
அமைதிப் பேச்சுவார்த்தை
இத்தகைய சூழமைவில் தான் தொடர்ந்து தமிழர் விடுதலைப் போராட்டம் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அந்நிலையில்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக ஒரு அமைதிப்பேச்சு வார்த்தையும் ஒரு தீர்வு திட்டமும் முன் வைக்கப்பட்டது.
தனித்தமிழ் ஈழத்திற்காக போராடி ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் வீரர்களை இழந்த நிலையில் மீண்டும் ஒரு விட்டுக் கொடுப்பை செய்ய வேண்டிய சர்வதேச அழுத்தம் மற்றும் சமகால பிராந்திய அரசியல் நிலைமை என்பவற்றினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 29 ஜூலை 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு உடன்பட்டது என்பதையும் கருத்துக் கொள்ள வேண்டும்.

அந்த ஒப்பந்தம் கூட ஜெயவர்த்தனவால்தான் உடைக்கப்பட்டது என்பதனை இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகரும் பதிவிடப் பிரதிநிதியாகவும், அதேநேரம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் இணைப்பாளராகவும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் கடமையாற்றிய ஜே.என். டிக்சித் (J.N. Dixit) தனது Assignment Colombo, Konark Publishers PVT LTD , Delhi (1998) நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருப்பதை இங்கே பதிவு செய்வது அவசியமானது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை சரிவர நடைமுறைப்படுத்த இலங்கை அரசு தவறியதன் விளைவு அந்த ஒப்பந்தத்தில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியமையும், அதனைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படையுடன் விடுதலைப் புலிகள் போரிட்டமையும் தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் எவ்வளவு உறுதியாக இருந்தது என்பதற்கு தக்க சான்றாகும்.
இருப்பினும் தமிழ் மக்களுடைய நலன் கருதி இந்திய இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது கூட ஒரு பேச்சுவார்த்தைக்கும் தீர்வு திட்டத்துக்கும் விடுதலைப் புலிகள் தயாராகவே இருந்தார்கள் அந்த அடிப்படையிலேதான் 1989 ஏப்ரல் 26ம் திகதியன்று பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
பேச்சுவார்த்தை தனிநாடு என்ற கோரிக்கையில் இருந்து இறங்கி சமஷ்டி ஆட்சி முறை என்ற நிலைக்கு தமிழர் தரப்பு விட்டுக் கொடுப்பை செய்து மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அமையத்தான் 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் நடைபெற்ற 'விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' (People's Front of Liberation Tigers - PFLT) கட்சியின் அங்குரார்ப்பண மகாநாடும் நடத்தப்பட்டு அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது.
இவ்வாறு இலங்கை அரசியலில் தேர்தலில் பங்குபற்ற மாட்டோம் தனித்தமிழ் ஈழமே ஒரு தீர்வு என்ற நிலையில் இருந்து தமிழர் தரப்பு ஒரு அரசியல் கட்சியை புதிதாக பதிவு செய்து சமஸ்டி ஆட்சிக்கு முறைமையை ஏற்க முன்வந்தமை என்பது தமிழ் மக்களுடைய விட்டுக் கொடுப்பாக ஏன் சிங்கள தேசத்துக்கு தெரியவில்லை.
போர்நிறுத்த ஒப்பந்தம்
சந்திரிகா விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தை 1995 ஜனவரி 3இல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களின் உடனடி அடிப்படைப் பிரச்சினைகளை அரசாங்கம் கவனிக்க தவறியதன் விளைவால் 95 ஏப்ரல் 19ல் முறிவடைந்தது. சந்தரிகா புலிகள் ஒப்பந்தத்தின் போதும் மேற்குறிப்பிட்ட விட்டுக் கொடுப்பை விடுதலைப் புலிகள் செய்தார்கள்.
அதன் பிற்பாடு 2000 ஆண்டில் ஆனையிறவு படைத்தளத்தை புலிகளால் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகள் ராணுவச் சமநிலையை அடைந்தனர். 2002ஆம் ஆண்டு ரணில்-பிரபா ஒப்பந்தத்தின் போதும் தனிநாட்டை விட்டுக்கொடுத்து சமஸ்டி தீர்வுக்கு இறங்கி வந்து அதனை பரிசீலிக்க தயாராகவே இருந்தார்கள்.

ரணில்-பிரபா ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22 அன்று இலங்கையின் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தமாகும்.
நீண்டகாலமாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டது. 23பெப்ரவரி 2002 முதல் நிரந்தர போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இரு தரப்பினரும் தாக்குதல்களை கைவிட ஒப்புக்கொண்டனர்.
சமாதானப் பேச்சுவார்த்தை நோர்வே நாட்டின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 'இலங்கை கண்காணிப்பு குழு' (SLMM) உருவாக்கப்பட்டது.
இராணுவச் சமநிலை அடைந்த நிலையிலும் விட்டுக்கொடுப்பு என்பது தமிழர்கள் பக்கம் மாத்திரமே இருந்ததை ஒழிய சிங்கள தேசத்தில் இருந்தோ சிங்கள அரசியல்வாதிகளிடம் இருந்தோ எந்த ஒரு விட்டுக் கொடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய வழி
இந்த அடிப்படையில் இன்றும் தமிழ் மக்கள் எதனை விட்டுக் கொடுப்பது, அழிவின் விளிம்பில் இருக்கும் மக்கள் இனியும் எதனை விட்டுக் கொடுத்து எதனைப் பெறுவது, என்பதுவே தமிழ் மக்களிடம் உள்ள பெரும் கேள்வியாக உள்ளது.
ஆகவே விட்டுக்கொடுப்பும், மன மாற்றமும் சிங்கள பௌத்த இன ஒடுக்குமுறை அரசிடமிருந்தும் சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலை மனநிலையில் இருந்தும் சிங்கள மக்களும் அரசியல்வாதிகளும் பிக்குகளும் விடுதலை பெற்றாலே ஒழிய இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு தீர்வை சிங்கள தேசம் ஒருபோதும் முன் வைக்காது.

அனைவரும் தமிழ் மக்கள் மீது குற்றம் சாட்டுவர் அண்மையில் ஜி.எல் பிரிஸ் இவ்வாறு கூட்டம் சாட்டுகிறார் என்றால் அவருடைய மனநிலையை புரிந்து கொண்டால் சிங்கள அரசினதும் சிங்கள மக்களினதும் மனநிலை என்ன என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
தமிழர்கள் எதனை மாற்ற முடியுமோ அதனில் தொழிற்ப்படவும், எதனை மாற்ற முடியாதோ அதனைப் புரிந்து கொள்ளவும் வேண்டியது அவசியமானது. அதுவே தமிழ் மக்களுக்கான விடுதலை நோக்கிய பயணத்திற்கான புதிய வழிகளை திறக்க உதவும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 06 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.