கிளிநொச்சியில் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் போராட்டம்: ஊழல் மறைப்பு குற்றச்சாட்டு தீவிரம்
கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழலை மூடிமறைக்கும் வகையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இரணைமடுக்குள விவசாயிகள் சம்மேளனத்தின் நிதியாண்டு அறிக்கைகள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டை மறைப்பதற்காக போராட்டம்
அதேபோன்று, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளுக்கு அரச மானியம் வழங்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவ்விடயம் தொடர்பாக பல ஊடகங்களில் ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், கரைச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களான ஆனந்த வடிவேல், விக்ரர் சாந்தி சிவமோகன், பாஸ்கரன் இராஜேந்திரம், இலட்சுமி காந்தன் உள்ளிட்டோர், விவசாயத்தில் ஈடுபடாத சிவபுரம், இராமநாதபுரம், மாயவனூர் பகுதிகளைச் சேர்ந்த மக்களை “சிறுபோக பங்கு” பெற்றுத்தருவதாக அழைத்து வந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

