அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் உள்ள 'ட்வின் ஃபால்ஸ்' நகரத்தில் அமைந்திருக்கும் ஒரு பரபரப்பான வணிக வளாகப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், தாக்குதல் நடத்தியவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இடாஹோவின் ட்வின் ஃபால்ஸ் நகரில் உள்ள 'இன்-என்-அவுட் பர்கர்' உணவகம் அருகே நேற்று(1) சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
துப்பாக்கிச் சூடு
நகர செய்தித் தொடர்பாளர் ஜோஷ் பால்மர் மற்றும் பொலிஸ் தலைவர் மேத்யூ ஹிக்ஸ் ஆகியோர் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இருந்த ஆபத்து முழுமையாக நீங்கிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரின் அடையாளத்தைக் கண்டறியவும், இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான பின்னணி மற்றும் நோக்கத்தை ஆராயவும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள வீதிகளும், அருகில் இருந்த பாலமும் தற்காலிகமாக மூடப்பட்டன.