செம்மணி உண்மைகளை வெளிப்படுத்த முதன்மை குற்றவாளி அரசாங்கத்திற்கு விதித்துள்ள கடும் நிபந்தனை
"பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தின் பிரதான குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் நேரில் சென்று சந்தித்தபோது, தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினால் மாத்திரமே உண்மைகளை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
உண்மையைக் கூறவேண்டும் என நினைப்பவர் இவ்வாறு நிபந்தனை விதிப்பாரா? என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கு
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய விசேட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சோமரத்ன ராஜபக்ச செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் குறித்துத் தன்னிடம் கூறிய அதிர்ச்சி தரும் விவரங்களை உள்ளடக்கியும், இது குறித்து மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
அதனையடுத்து மேலதிக விவரங்களைக் கேட்டறியும் நோக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்சவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் முதற்கட்டமாகச் சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதியும் சந்திப்புகள் இடம்பெற்றன.
ஜனாதிபதிக்கு கடிதம்
கடந்த ஜனவரி சந்திப்பின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கான புதிய கடிதமொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளிடம் சோமரத்ன ராஜபக்ச கையளித்திருந்தார்.

செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்துத் தற்போது வரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அரசால் முன்னெடுக்கப்படவில்லை என்று அவர் அதில் சாடியுள்ளார்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப சுயாதீனக் குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் கோரியிருந்தார்.
செம்மணியை பார்வையிட்ட அமைச்சர்
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, செம்மணியைப் பார்வையிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் சோமரத்னவின் அண்மைய வெளிப்படுத்தல்கள் மற்றும் விசாரணைகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர்,

"நான் சோமரத்ன ராஜபக்சவை சிறைச்சாலைக்குச் சென்று நேரடியாகச் சந்திக்கவில்லை. இருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த அவரைச் சென்று சந்தித்தார்.
அதன்போது தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தால் மட்டுமே செம்மணி உண்மைகளை வெளிப்படுத்துவதாக சோமரத்ன ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஒரு பாரிய குற்றத்தைச் செய்துவிட்டு, நீதியின் முன் நிபந்தனை விதிப்பவர்களின் வாக்குமூலங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்துச் சட்ட ரீதியாகவே தீர்மானிக்கப்படும் என்றார்.
இந்த சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான அவசர தேவைப்பாடுகள் மற்றும் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை அரசின் சார்பில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் இந்தக் கலந்துரையாடலில் நேரடியாகப் பங்கேற்றிருந்தனர்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுடன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.சிறீபவானந்தராஜா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதானி மகேஷ் கட்டுலந்த ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதிலும், அவர்களின் வாழ்வாதார மற்றும் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும் உள்ள நடைமுறைச் சாத்தியங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.