அவதானமாக இருக்கவும் - மோசடி காதலர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட மோசடி காதலர்கள் மற்றும் நபர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை விடுது்துள்ளனர்.
காதலர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் என்று கூறிக்கொண்டு, திருமணம் செய்துக்கொள்வதாக வாக்குறுதியளித்து பெண்களை பணம் அல்லது நகைகள் கேட்டு ஏமாற்றும் சம்பவம் அதிகரித்துள்ளன.
கொலையில் முடிந்துள்ள மோசடிகள்
மேலும் பெண்களை ஏமாற்றி அவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது போன்ற பல முறைப்பாடுகள் சமீபத்தில் வந்துள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்த மோசடிகள் சில கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸ் பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே, இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் கவனமாக இருக்குமாறும் பொலிஸ் வலியுறுத்துகின்றது.
இதற்கிடையில், இணையத்தில் தொடர்ந்து நிகழும் மோசடி மற்றும் கொலைக் குற்றங்கள் மீதும் பொலிஸ் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுபோன்ற மோசடிகள் மற்றும் பிற குற்றங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள் மற்றும் சிவில் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தகவல்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பின்பற்ற வேண்டிய பல வழிகாட்டுதல்கள்
இந்த நேரத்தில், பாதுகாப்பிற்காக பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய பல வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட அறிமுகமில்லாத நபர்களை நம்புவதையும், அவர்களுக்குப் பணம், தங்கம் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களைக் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும், அறிமுகமில்லாத நபர்களுக்கு எந்த நேரத்திலும் அந்தரங்கமான புகைப்படங்கள் அல்லது காணொளிகளை அனுப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெரியாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை எண்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது தனிப்பட்ட முகவரிகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும் மேலும் அறிவுறுத்துகின்றது.
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ இதுபோன்ற மோசடி அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக உணர்ந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இந்த தகவல்களை 118, 119, 107 அல்லது 109 ஆகிய அவசர எண்கள் மூலமாகவும் பொலிஸாருக்கு விரைவாக தகவல்களை வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.