தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல்
இலங்கை அரசியல் கலாச்சாரம் மகாவம்ச மனநிலையில் இருந்து ஒருபோதும் மாறப்போவதில்லை என்பதை கடந்த ஒன்றரை வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இன்றைய இடதுசாரி அரசியல் அதிகார வர்க்கமும் நிரூபித்துள்ளது.
கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தமிழர் தாயகத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் ஆயுதப் போராட்டத்தை ஏற்படுத்தியது.
தமிழின அழிப்பு செயற்றிட்டம்
அத்தகைய ஒரு அநீதி இனிமேல் இழைக்கப்பட மாட்டாது. மேடையில் முதலைக் கண்ணீர் வடித்து முழங்கியவர்கள் இன்று மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சாதாரண ஒரு தமிழ் பப்பிசை பாடகரை கைது செய்து அடைத்ததன் மூலம் அநுர அரசாங்கமும் தமிழின அழிப்பு செயல் திட்டத்தை மேலும் முன்னோக்கி நகர்த்தி செல்கிறது என்பதை நிரூபித்து விட்டார்கள்.
தேரவாத பௌத்த தத்துவ நூலான "மகா மகாவம்ச"மகாநாம தேரரின் இனக்குரோத மனநிலையில் "தம்மதீப" கோட்பாடு வடிவமைக்கப்பட்டது.

அது தமிழின, இந்திய எதிர்ப்பு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதற்கு இலங்கை தீவில் தமிழினத்தை அழிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
இதனை கடந்த 78 ஆண்டுகளாக ரத்தம் தோய்ந்த இனப்படுகொலை செய்ததனை சிங்கள பௌத்த அரசின் இறையாண்மை என்பதன் ஊடாக நியாயப்படுத்துகிறது.
இதன் மூலம் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கட்டமைப்பு (structural genocide) அரசியல் யாப்பு சட்டத்துக்குள் உட்படுத்தப்பட்டுள்ளது.
இனப்படுகொலை
இந்த இனப்படுகொலைக் கட்டமைப்பு வாதம் தனி ஒரு மகாநாம தேரரினாலோ அல்லது சில தனித்தனி மனிதனாலோ மட்டும் கட்டமைப்புச் செய்து வளர்க்கப்பட்டதல்ல.
இது ஒரு நீண்ட வரலாற்று வளர்ச்சியில்(Historical development) வடிவம் பெற்று ஒரு முறைமைக்கு(System) உட்படுத்தப்பட்டு விட்டது.

இன அழிப்பு என்பது இரத்தம் தோய்ந்த இனப்படுகொலைகளால்(Bloody Genocide) மட்டும் நிகழ்த்தப்படுவது அல்ல. அது ஒரு இனத்தை ஆதிக்க இனத்துக்குள் கரைத்து விடுகின்ற இனமயமாக்கல் (Assimilation) மூலமும் இல்லாத ஒழித்து விட முடியும். அதுவே இப்போது இலங்கையில் தொடர்கிறது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை ரத்தம் தோய்ந்த படுகொலைகளையை இலங்கை சிங்கள பௌத்த அரசு நிறைவேற்றி வந்தது.
இப்போது அது இன்னொரு கட்ட வளர்ச்சி அடைந்து இன மயமாக்கல் என்ற வகையில் இனப்படுகொலையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது. அதுவே இன்றைய இலங்கை அரசியலின் நடைமுறையாக மாற்றமடைந்துள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு
சிங்களத் தலைவர்கள் திருந்தி விட்டார்கள், உண்மையை உணர்ந்து விட்டார்கள், கடந்த காலத் தலைவர்கள்தான் ஏமாற்றி விட்டார்கள், அவற்றை மறந்து புதிய இலங்கையை உருவாக்குவோம், தமிழர்களும் சிங்களவர்களும் மனம் விட்டு பேசினால் பிரச்சனை தீர்ந்துவிடும், சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்து நின்று பேசியதினால்தான் பிரச்சனை, இப்போது சிங்களவர்கள் இறங்கி வந்து பேசத் தயாராக உள்ளனர், நாம் பேசிப் பார்ப்போம், சிங்களவர்கள் மனம் திரும்பி குணப்பட்டு விட்டார்கள் என்றெல்லாம் சிங்கள தரப்பு நயவஞ்சக அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்.
இதனை நம்புவது போல நடித்து சுயநல பண அரசியலைச் செய்ய ஒரு தமிழர் கூட்டம் இருக்கத்தான் செய்யும். அது இப்போதும் இருக்கும்.

அந்த ஓநாய் கூட்டம் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம், ஆனால் இப்போது இதனை நம்புவதாக நீண்ட கும்பகர்ணன் நித்திரைக்கு பின்னர் திடீரென விழித்தெழுந்து சில ஏமாளித் தமிழ் கம்யூனிசியர்களும் சிங்களத்தின் வாந்தியை அப்படியே விழுங்கி பிதற்ற தொடங்கி விட்டார்கள்.
இந்த இடத்தில் இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியல் கலாச்சாரத்தில் இன ஒழிப்பு கட்டமைப்பு வாதமும் (structural genocide) அதன் அரசியல் செல் நெறியில் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்ற ஒன்று இல்லை என்பதை முடிந்த முடிவாக கொண்டிருக்கிறார்கள்.
ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனம் இல்லை என்றும், தமிழர்களுக்கு தாயகம் இல்லை என்றும் நிராகரிக்கும் இடதுசாரி அனுராத தலைமையிலான இந்த அரசை எவ்வாறு ஈழத் தமிழர்கள் நம்புவது?
தமிழர்களுக்கான நியாயம்
அவர்களிடம் இருந்து நீதியான தீர்வு ஒன்று தமிழ் மக்களுக்கு எவ்வாறு கிடைக்கும் என ஏற்றுக் கொள்வது? அதனை நம்பி எவ்வாறு பேசுவது? என்பது சார்ந்து சிந்திக்கத் தெரியாத கசாப்பு கடையில் வெட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட ஆடு தனது மரணைத்தை அறியாது அங்கு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் குழைதழைகளை திண்ணுவதுபோல தமிழ அரசியல் ஆடுகள் சிங்களத் தலைவருடன் கூடிக் குலாவி தேனிலவு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ரோகனா விஜயவீராவால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி இடதுசாரிக் கட்சி தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகவோ, தமிழ் மக்களுக்கு ஒரு தாயக நிலப்பரப்பு இருக்கின்றது என்றோ, தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை உள்ளது என்பதையோ இந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதன் தொடர்ச்சியாக உள்ள இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளாத இந்த போலி இடதுசாரிகளின் கடந்த ஒன்றரை ஆண்டு கால இலங்கை அரசியல் அதிகார ஆட்சியில் தமிழ் மக்களுக்கான தீர்வையோ, அல்லது தமிழ் மக்களுக்கான நீதியையோ எங்கேயாவது ஓரிடத்தில் முன்னெடுத்தார்களா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது.
அப்படியானால் இவர்கள் தமிழ் மக்களுக்கு எதனைச் சொல்கிறார்கள்? இன்றைய அரசியல் நிலையில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதியாக அமர்ந்திருப்பதாகவே கட்புலனுக்கு தோன்றும்.
அரசியல் யாப்பு சட்ட விதி
ஆனால் உண்மையான ஜனாதிபதி அதிகாரம் படைத்தவர் டில்வின் சில்வாவே. இடதுசாரி கட்சி கட்டமைப்பில் செயலாளர் நாயகத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளது.
அந்த அடிப்படையில் இன்றைய தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் நாயகம் டில்வின் சில்வா நினைத்த எந்தநேரத்திலும் இலங்கையின் ஜனாதிபதி நாற்காலியில் அமர முடியும்.

அதற்கான சட்ட வழிமுறை அரசியல் யாப்பு சட்ட விதிகளில் உண்டு. "மாகாண சபை தேர்தல் இந்த வருடம் நடத்தப்பட மாட்டாது" என அண்மையில் டில்வின் சில்வா அறிவித்துள்ளார்.
ஆனால் உண்மையில் இந்த வருடம் அல்ல இந்த அரசாங்கத்தின் ஆட்சி முடியும் வரையும் தேர்தல் நடைபெற மாட்டாது என்பதையே உண்மையாகும்.
இலங்கையின் அரசியல் யாப்பில் தமிழர்களுக்கென ஒரு அதிகார அலகு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் வாயிலாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் சட்ட ரீதியாக வரையப்பட்டுள்ளது.
சிங்கள அரசியல் தலைவர்கள்
அந்த சட்ட திருத்த வரைபினூடாக ஈழத் தமிழர்களுக்கான பிராந்திய ரீதியிலான ஒரு அதிகார அலகு வழங்கப்பட்டு விட்டது.
அந்த பெயரளவிலான அதிகார அலகில் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப சலுகைகள் மட்டுமே உள்ளது என்பது வேறு விடயம்.
ஆனாலும் சட்ட ரீதியாக அவ்வாறான ஒரு பிராந்திய அலகுகூட இருப்பதனை எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவர்களும் விரும்பவில்லை. அதற்கு அநுர தலைமையிலான இன்றைய அரசாங்கமும் விதிவிலக்கல்ல.

2004 ஆம் ஆண்டில் சுனாமி பேரழிவின்போது வடகிழக்கு மிக மோசமாக பாதிப்படைந்த நிலையில் அன்றைய காலத்தில் வட-கிழக்கின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இதன்போது பாதிக்கப்பட்ட, அழிவுக்கு உட்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை செய்வதற்கான சுனாமிக் கட்டமைப்பு என்ற நிவாரணப்பணி அமைப்பில் புலிகள் பங்குபற்றக்கூடாது, அதற்கு அனுமதிக்க கூடாது என போர்க்கொடி தூக்கி சுனாமிக் கட்டமைப்பையே இல்லாதொழித்து இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதையே தடுத்து நிறுத்தியவர்கள்தான் இந்த தேசிய மக்கள் சக்தியினர்.
பொருளாதார விருத்தி
இதிலிருந்து இவர்களுடைய இனக்குரோத மனப்பாங்கை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாண தமிழர் தாயக இணைப்பை விரும்பாமல் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கி இலங்கை நீதிமன்றத்தை நாடி அந்த வடக்கு-கிழக்கு இணைப்பை உடைத்து இரண்டாகப் பிரித்ததில் தேசிய மக்கள் சக்தியினர் வெற்றியைப் பெற்றார்கள்.

இப்போது ஆட்சிக்கு வரும் வரை தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு, தமிழ் மக்களுக்கான பொருளாதார விருத்தி என பலவாறு பேசியவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழ் அரசியல் உரிமைகள் பற்றி வாயே திறக்கவில்லை.
ஆனாலும் தமிழர் தாயக நிலப்பரப்பில் அடிக்கடி பயணம் செய்து தமிழ் மக்களுடன் கூடிக் குழாகுவதாக ஒரு தோரணை காட்டுகிறார்கள்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றியும், உரிமைகள் பற்றியும் எதுவும் பேசாமல் தொடர்ந்து மௌனமாக காலத்தை இழுத்தடிப்பு செய்வதன் மூலம் தமிழ் மக்களுக்கான பிரச்சினையை மறைப்புச் செய்யவும், மறப்புச் செய்யவும் முனைகிறார்கள்.
முள்ளிவாய்க்கல் படுகொலை
ஏன் நாம் நிறைய பேச வேண்டும் ஒரே ஒரு உதாரணம் பட்டுலந்தை படுகொலை என்பது தேசிய மக்கள் சக்தி இடதுசாரி இயக்கத்தின் இளைஞர்கள் மோசமாக படுகொலை செய்யப்பட்ட ஒரு சம்பவம். அது பயங்கரவாத தடை கட்டத்தின் கீழேயே நிகழ்ந்தது.
இவ்வாறு தமது தோழர்கள் மோசமாக வதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக்கூட அவர்கள் விசாரிக்க தயார் இல்லை.
ஏனெனில் இது தொடர்பில் விசாரிக்கப்பட்டால் முள்ளிவாய்க்கல் படுகொலைகளும் விசாரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்பதே உண்மையாகும்.

அந்த மிக மோசமான கொடூர சட்டத்தினால் கொல்லப்பட்ட தமது தோழர்களுக்காகவே விசாரனை நடத்த அவர்கள் தயார் இல்லை என்றால் தமது பிரதான எதிரியாக கருதுகின்ற தமிழினத்திற்கு ஏதாவது நீதி விசாரணை நடத்துவார்களா? அல்லது தமிழ் மக்களுக்கு ஏதாவது நீதியை வழங்குவார்களா? உரிமையைத்தான் அவர்கள் வழங்க முன்வருவார்களா? இல்லவே இல்லை ஒருபோதும் அது நடைபெற மாட்டாது.
இப்போது யாழ்ப்பாணத்தில் அதே பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் ஒரு தமிழ் இளைஞன் புலிகளைப் பற்றி பாடல் பாடினான் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிங்கள இன மயமாக்கல்
ஒரு சாதாரண பாடகரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது என்பது தமிழ் மக்களை அச்சுறுத்துவதற்கான செயல்.
தமிழ் மக்கள் தமது அரசியல் செயற்பாடுகளை நிறுத்தி இந்த கைதைப் பற்றி பேசவும், அதைப்பற்றி அதற்காக போராடவும் விடுவதன் மூலம் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் பற்றி பேசுவதை மழுங்கடிப்பது, தமிழ் மக்களுடைய கவனத்தை திசை திருப்புவது, தமிழ் மக்களைத் தொடர்ந்து அச்சத்துக்குள் வைத்திருப்பது என பல நோக்கங்களைக் கொண்டதாக அமைகிறது.

ஒரு இன மக்களை தொடர்ந்து அச்சத்துக்குள்ளும், ராணுவ நடமாட்டத்திற்குள்ளும், இராணுவ பிரசன்னத்துக்குள்ளும், இராணுவ சுத்தி வலைப்புக்குள்ளும் வைத்திருப்பது என்பது அந்த மக்களை அரசியல் ரீதியாக சிந்திப்பதை தடுப்பது, அவர்களுடைய ஆக்கத்திறன் வளர்ச்சியை தடுப்பதற்கான முயற்சியாகவும் மூலோபாயமாகவும் அமைகிறது.
இதுவும் ஒரு வகையில் இனவழிப்பின் ஒரு பகுதியே. இவ்வாறு தமிழர் தாயகத்தில் ஒரு அச்ச நிலை தோற்றுவிப்பதன் மூலம் இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேறவும், தமது தாயகம் பற்றிய உணர்வுகளை மழுங்கடிக்கவும் செய்வதற்கான தொடர் செயற்பாடுதான்.
இதன் மூலம் தமிழ் மக்களை சிங்கள இன மயமாக்கல்(Assimilation) செய்வதையே இன்றைய அநுர அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
ஈழத் தமிழர்களின் குடித்தொகை
இலங்கைக்கு தீவின் ஈழத் தமிழர் குடித்தொகை பெருமளவு வீழ்ச்சி அடைந்து வருவதை அண்மைய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
1980 களில் வடகிழக்கில் இருந்த ஈழத் தமிழர்களின் குடித்தொகையின் இயற்கை வளர்ச்சி வீதம் சரியாக இருந்திருக்குமேயானால் இப்போது வடகிழக்கில் தோராயமாக 45 லட்சம் தமிழர்கள் இருக்க வேண்டும். ஆனால் இப்போது இருப்பது வெறும் 20 லட்சம் தமிழர்களே.

அப்படியானால் தமிழர் தாயகத்தில் இருக்க வேண்டிய 25 லட்சம் தமிழர்கள் இல்லாத ஒழிக்கப்பட்டு விட்டார்கள். இதில் 15 லட்சம் பேர் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் மிகுதி 10 லட்சம் பேர் துண்டு விழுகிறது.
ஆகவே இப்போது தாயகத்தில் வாழ்கின்ற தமிழர்களின் மூன்றில் ஒரு பங்கினர் இல்லாது இருப்பது என்பது மூன்றில் ஒரு பங்கினர் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களும், மற்றும் இயற்கை வளர்ச்சி வீதத்தில் பிறப்பு விகிதம் இல்லாமல் போன அமையும்தான்.
இந்த பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் தோராயமாக கிழக்கில் 90 ஆயிரம் விதவைகள் வடக்கில் 10 ஆயிரம் விதவைகள் எனப் பார்த்தால் ஒரு லட்சம் விதவைகள் என்பதுவே பிறப்பு வீதத்தை வீழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
பயங்கரவாத தடைச் சட்டம்
அத்தோடு யுத்தத்தில் கொல்லப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல் என்பதோடு இவர்களின் இழப்பினால் இயற்கை வளர்ச்சி அதாவது இயற்கை குழந்தைகள் பிறப்பு இல்லாத ஒழிக்கப்பட்டு விட்டது என்ற இந்தக் கணக்கை பார்க்கின்ற போது ஈழத் தமிழர்களின் நிலை என்பது நிலை என்ன என்பது புரியும்.
இந்த நிலையில் இப்போது ஒரு புதிய நெருக்கடியை தோற்றுவிப்பதன் மூலம் மேலும் பெருந்தொகை இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேற வைப்பதே இன்றைய அநுர அரசாங்கத்தின் நோக்காக உள்ளது.

ஒரு சாதாரண பாடகனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதன் மூலம் பல ஆயிரம் தமிழ் இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேற்ற இந்த நடவடிக்கை உதவும்.
இது சிங்கள தேசத்துக்கு பெரும் சேவையைச் செய்யும். தமிழர் தேசத்தில் எந்த அளவுக்கு இளைஞர்கள் வெளியேறுகிறார்களோ அந்த அளவுக்கு தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வது சிங்கள தேசத்துக்கு இலகுவாக போய்விடும்.
இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் தமது இருப்பு நிலையை சிந்தித்து தமிழர் தாயகத்தை காக்கவும், தமிழ்த் தேசியக் கட்டுமானங்களை மீள்கட்டுமாணம் செய்வதற்குமான அவசர அரசியல் வேலை திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam