இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார்.
இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ஏ.ஐ. 281 என்ற விமானம் மூலம் நேற்று மாலை 4.20 மணியளவில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
முக்கிய சந்திப்புக்கள்..
அவருடன் ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் உள்ளிட்ட உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் மண்டபத்தில் வைத்து ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித்த ருவான் கொடிதுவக்கு, இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் ஜகார்யன் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் இந்த ஐந்து நாள் விஜயமானது, இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதுடன், வர்த்தகம், எரிசக்தி மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.