பொலிஸாரின் வலையில் சிக்கிய ஸ்பைடர் வுமன்..! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..
நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் 'ஸ்பைடர் வுமன்' (சிலந்தி பெண்) என அழைக்கப்படும் பெண், சாய்ந்தமருது பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை, அவரை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் விநியோகம்
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை (13) மாலை சாய்ந்தமருது பொலிஸாரினால் விசேட சோதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கல்முனை புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 2310 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 40 வயதுடைய 1 பிள்ளையின் தாயான இந்த சந்தேகநபர் பொலிஸாரின் சுருக்குப் பொறியில் சிக்கினார்.
கணவனை இழந்த இவர், தனது உறவினர்களின் ஒத்தாசையுடன் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
விளக்கமறியல்
பொலிஸார் சோதனையிட வரும் சந்தர்ப்பங்களில், வீடுகளின் மாடிகளில் இருந்து ஏனைய மாடிகளுக்கு லாவகமாகப் பாய்ந்து தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தமையினாலேயே இவருக்கு மக்கள் 'ஸ்பைடர் வுமன்' எனப் பெயரிட்டுள்ளனர்.

இம்முறை பெண் பொலிஸாரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினர் மாறுவேடத்தில் சென்று, நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே கால் உடைந்த நிலையிலிருந்த இவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்னரும் இரு வேறு சந்தர்ப்பங்களில் கைதான இவர், கல்முனை தலைமையக பொலிஸாருக்குப் பெரும் சவாலாக விளங்கியதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இந்தசோதனை நடத்தப்பட்டது.
USS Abraham Lincoln கப்பல் 9 மாதங்களாக கடலில்..! வளைகுடா நோக்கி செல்லும் USS George Washington கப்பல்