முல்லைத்தீவு பகுதி கிராம மக்களின் முன்மாதிரியான செயற்பாடு: போதைப் பாவனையை ஒழிக்க நடவடிக்கை (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட சிலாவத்தை பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கிராம அமைப்புக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் விளைவுகள், பாதிப்புக்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்புக்களின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கிராம அலுவலர் தலைமையில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து தமது கிராமத்தில் சிவில் பாதுகாப்பு குழு ஒன்றை அமைத்து போதைப்பொருள் பாவனையை தடுக்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கை
கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், கிராமத்தில் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை இனம்கண்டு அவர்களை பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த கிராமத்தின் கிராம அலுவலர் தலைமையில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.B.M.A அமரசிங்க பங்குபற்றுதலுடன் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகம் உள்ளிட்ட கிராம மட்டத்தில் உள்ள அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கி சிவில் பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த சிவில் பாதுகாப்பு குழு தமது கிராமத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றவர்களை கண்டறிந்து பொலிஸாரை அழைத்து அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
கைது நடவடிக்கை
அந்தவகையில் தமது கிராமத்தில் தீர்த்தக்கரை பகுதியில் அதிகமாக கசிப்பு விற்பனை இடம்பெற்றுவரும் நிலையில், அவ்வாறு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் அதிகளவான கசிப்புடன் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று கிராமத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களையும் குறித்த சிவில் பாதுகாப்பு குழு கண்டுபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அத்தோடு தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் பாவனை
சட்டவிரோத செயற்ப்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
என்றும் அவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்ற நபர்களுக்கு பொலிஸார் உதவி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குறித்த கிராம மக்கள்
மற்றும் இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் இந்த நடவடிக்கைக்கு பலரும்
பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் ஒவ்வொரு கிராமமும் தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்க
முன்வந்தால் பொலிஸார் மீது குற்றம் சாட்டிக்கொண்டு இருக்காது எமது
கிராமங்களில் மாவட்டத்தில் நாட்டில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க முடியும் என
சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |