பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (24.07.2026) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே, எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களினதும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையான் இணையவழி மூலமாக வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ள செய்யப்படடார். ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், “பிள்ளையானை வெலிசரை கடற்படை முகாமில் எப்படி வைத்திருக்க முடியும்? எனவே இந்த வழக்கிற்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும்” என அவரின் சட்டத்தரணிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகிறது.
மேலதிக தகவல் - பவன்
YOU MAY LIKE THIS VIDEO