சட்டி சுட்டுவிட்டதென்று அடுப்பை தகர்க்க முனையும் ஈழத்தமிழர்
இறையாண்மையை மீட்டெடுப்பதற்காக போராடும் ஈழத் தமிழினம் தமது மனவிருப்புக்கு ஏற்றவாறோ, எழுந்த மாத்திரத்திலோ தமக்குரிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்க முடியாது.
அதேபோலவே உலகம் தழுவிய அரசியலில் உலகளாவிய ஆதரவைப் பெற பொருத்தமானதும், பிராந்திய சக்திகளினாலும், சர்வதேச வல்லமை வாய்ந்த சக்திகளாலும் விரும்பக்கூடிய ஒரு வெளியுறவுக் கொள்கையை புவிசார் அமைப்பிடம் சார்ந்தும், அண்டை நாடுகள் சார்ந்தும், பிராந்தியம் சார்ந்தும் மிகக்கவனமாக ஆராய்ந்தே வெளியுறவுக் கொள்கையை வகுக்கவேண்டும்.
அவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கிய பார்வையில் ஒரு வெளியுறவுக்கொள்கை வகுக்கப்பட்டால் மாத்திரமே ஈழத் தமிழர்களை தேசியஇனம் என் அடையாளப்படுத்த முடியும்.
ஈழத் தமிழர்களின் விடுதலை
தேசியஇனம் என்பதற்கு அந்த இனம் உலகம் தழுவிய அரசியலில் சர்வதேச நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேணவும், அதனை வளர்த்துச் செல்லும் அரசியல் இராஜதந்திர முதிர்ச்சியை கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.
சரியான வெளியுறவுக் கொள்கையை வகுக்க தவறின் ஈழத்தமிழர் தேசிய இனம் தகுதியையும் இழந்து விடுவர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதவக்கூடிய உறவுகளை இனம் கண்டு உறவாடுவதுதான் வெளியுறவு கொள்கை.

இங்கே சாத்தியங்களின் அடிப்படையில் சாத்தியப்பாடானவற்றை அணுகி சாத்தியப்படுத்தும் வித்தைதான் இராஜதந்திரம்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் அவர்களுடைய வெளியுறவுக் கொள்கையில் புவிசார் அமைப்பிடம் மிக முக்கியத்துவமானது.
அதனடிப்படையில்தான் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர்களின் தாயகநிலத்தின் அமைவிடத்தை மாற்ற முடியாது. இந்த புவியியல் அமைவிடத்தை வைத்துக்கொண்டு பிராந்தியம், சர்வதேசம் என்ற அடிப்படையில் எவற்றை மேம்படுத்த முடியுமோ அவற்றை மட்டுமே மேம்படுத்த முடியும்.
அவ்வாறு படிப்படியாக மேம்படுத்தியே மேல்நிலைக்குச் சொல்ல முடியும். அதை விடுத்து மனம் போனபோக்கில், மனவிருப்புகளின் அடிப்படையில், ஏட்டிக்கு போட்டியான வெளியுறவுக் கொள்கையோ, சர்வதேச உறவுகளையோ கட்டு வளர்க்க முடியாது.
இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்டுதான் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக போராடுகின்ற அமைப்புகளும், தனி நபர்களும், நலன்விரும்பிகளும், அறிஞர்களும் செயற்பட வேண்டும்.
சிங்கமும், புலியும் வாழும் காட்டில்தான் மான்களும், முயல்களும், குரங்குகளும், சிறு விலங்குகளும் வாழ்கின்றன. பாம்புகள் உள்ள பற்றைகளில்தான் தவளைகளும், பூச்சிகளும், புழுக்களும் வாழ்கின்றன.
ஆயினும் அவையவை தமக்குரிய பாதுகாப்பு எல்லைக்குள் இருந்து கொண்டு தம்மை தற்காத்து வாழ்கின்றன. இந்த அடிப்படை விலங்கியல் அறிவை பார்த்தாவது ஈழத்தமிழர்கள் தமக்குரிய இருப்பை, தமக்குரிய பாதையை, தமக்குரிய பாதுகாப்பை வடிவமைக்க வேண்டும்.
காட்டில் சிங்கம், புலி இருப்பதற்காக மான்களும், முயல்களும் காட்டைவிட்டு வெளியேறுவதில்லை. கடலிலே திமிங்கலம் இருக்கின்றது என்பதற்காக கடல் உள்ள மீன்கள் எல்லாம் தரைக்கு படையெடுப்பதில்லை.
பிரித்தானியா உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகள்
அவ்வாறே எதிரிகளும், நண்பர்களும், துரோகிகளும், கயவர்களும் நிறைந்த இந்த சர்வதேசத்தில் அவரவர் தமக்குரிய பாதுகாப்பை அறிவார்ந்து வகுத்துக்கொள்வது வாழ்விற்கு வழிசமைக்கும்.

அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது. ஆயினும் அரசியலுக்கு புவிசார் அமைவிடம் மிக முக்கியமானது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் யார் நிரந்தர நண்பன்? யார் எதிரி? யார் பகைவன்? யார் தற்காலிக பகைவன்? யார் அரைவழி நண்பர் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
அதுவே அரசியல் இராஜதந்திர அறிவின் முதிர்ச்சியை வெளிக்காட்டுவதாக அமையும்.
ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்திருக்கும் நிலையில் தமிழர்களுக்கு இழைக்கப்பபட்ட மிகப்பெரும் மனித பேரவலமும், இனப்படுகொலையும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சர்வதேச அரசியல் தளத்தை தந்துள்ளது. அதனை பயன்படுத்தி சர்வதேச ஆதரவை பெறக்கூடிய சாத்தியமான சூழல் உண்டுதான்.
ஆயினும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று ஆசிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன.
அதேநேரம் அமெரிக்கா, கனடா ஆகிய இரண்டு நாடுகளும், பிரித்தானியா உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகளும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் இந்த நாடுகளில் அந்த அமைப்பு இயங்குவதற்கு தடை ஏற்பட்டுவிட்டது.
இந்தத்தடை என்பது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கு என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் இந்த பயங்கரவாத பட்டியல் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்கான தமிழீழ மக்களுக்கான தடையாகவே நடைமுறையில் செயற்படுகிறது.
சர்வதேச அரசியல் நகர்வுகள்
இத்தடை புலம்பெயர்ந்த தேசங்களில் ஒரு ஜனநாயக வழி போராட்டங்களை நடத்துவதற்கும், சர்வதேச அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்கும் பெரும் இடைஞ்சலாக உள்ளது.
அவற்றைத் தாண்டியும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச அரசியலில் தமக்கான வகிவாகத்தை வகிக்கிறார்கள்தான். ஆயினும் புலிகளை பயங்கரவாத பட்டியலில் சேர்த்திருக்கும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் 15 லட்சத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.

அவர்களால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரும் கடந்த 17 ஆண்டுகளாக ஏதேனும் ஒரு நாட்டில் ஈழத்தமிழருக்கான ஆதரவை பெறமுடியவில்லை.
அதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஏதாவது ஒரு நாட்டில்கூட நீக்க முடியவில்லை. அத்தோடு ஐ.நா மற்றும் சர்வதேச அரசியலில் நீண்ட காலமாக தமிழர்களுக்கு சார்பான பெரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்த முடியவில்லை.
இது ஈழத்தமிழர்களின் புலம்பெயர் கொள்ளளவுக்கு ஏற்றளவு அவர்களுடைய அரசறிவியல் முதிர்ச்சியும், சர்வதேச செல்வாக்கின் அடைவிள் அளவும் பின்தங்கியுள்ளதையே காட்டுகிறது.
இத்தகைய சூழலில் தற்போது ஹொங்கொங்கில் உள்ள The Chinese University of Hong Kong (CUHK)ன் சட்ட பீட பேராசிரியர் அலெக்ஸ் கிரீன் (Faculty of Law Professor Alex Green) தலைமையில், நாடுகடந்த தமிழீழ அரசுடன்(TGTE) இணைந்து “இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு உருவாக்குவதற்கு எதிர்நோக்கும் சர்வதேச சட்டரீதியான சவால்கள்“ என்ற தலைப்பில் ஒரு முதுகலை ஆராய்ச்சி திட்டத்தை(postdoctoral research project) மேற்கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டடுள்ளது.
அதில் ஆய்வாவளர் தகுதிநிலையாக
1)History அல்லது Public International Law-ல் PhD பெற்றவராக இருக்க வேண்டும்.
2)இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பான பின்னணி விரும்பத்தக்கது.
3)வரலாற்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
4)Legal மற்றும் policy briefs எழுதுவதில் பங்கேற்க வேண்டும்.
5)சர்வதேச academic publications-க்கு ஆய்வுகளைத் தயாரிக்க வேண்டும்.
6)TGTE மற்றும் பிற project stakeholders உடன் பணியாற்ற வேண்டும்.
7)ஆரம்ப நியமனம் ஆறு மாதங்கள்; Hong Kongஇல் நேரடியாகப் பணியாற்ற வேண்டும் என தமிழீழ சுயாதீன அரசு தொடர்பான ஆய்வாளர்களுக்கான அடிப்படை தகுதி அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியான தமிழரசு உருவாகுவதற்கு
இந்த CUHK ஆய்வு உண்மையில் என்ன? என்பதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்த ஆய்வின் பொருள், இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு(independent Tamil State) உருவாவதைச் சுற்றியுள்ள தற்போதைய அரசியல் மற்றும் சர்வதேச சட்ட விவாதங்கள், புதிய அரசை உருவாக்குவதற்கு எதிர்நிற்கும் சட்டரீதியான சவால்களை குறிக்கோள்சார் கல்வி மதிப்பீடாக(objective academic assessment) ஆராய்வதாகவும், கொங்கொங் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பாகவும் இது உள்ளது.
இந்த ஆய்வின் மையக் கேள்வி ஒரு தனியான தமிழரசு உருவாகுவதற்கான சர்வதேச சட்ட மற்றும் அரசியல் அடித்தளம் என்ன? என்பதாக இருக்கிறது.
பேராசிரியர் அலெக்ஸ் கிரீன், எழுதிய அரசியல் சமூகமாக அரசுரிமை: சர்வதேசச் சட்டமும் புதிய நாடுகளின் தோற்றமும், என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்,2024.(Statehood as Political Community: International Law and the Emergence of New States, Cambridge University Press, 2024.) நூலில் கிரீன் முன்வைக்கும் முக்கியக் கோட்பாடு, புதிய அரசு உருவாகுவதற்கு வெறும் பிரதேசம்(territory), மக்கள் தொகை,(population), அரசாங்கம்(government) போன்ற பாரம்பரிய அளவுகோல்கள் மட்டும் போதாது.
அது ஒரு “உண்மையான அரசியல் சமூகம்”(“genuine political community”)ஆக இருக்க வேண்டும் என்றும், அந்த அரசியல் சமூகத்தின் உருவாக்கம் தனிநபர்களின் அரசியல் நடவடிக்கை(political action) அறம் நெறிமுறை சார்ந்த முக்கியத்துவத்துடன் (ethical importance) ஒத்துப்போக வேண்டும் என்றும் வாதிடுகிறது.
அவர் இதனை அரசு உருவாக்கம் குறித்த குரோஷியனின் கோட்பாடு(Grotian theory of state creation)எனக் குறிப்பிடுகிறார்.
அரசியல் சமூகம், சர்வதேச சட்டம், மற்றும் புதிய அரசுகளின் எழுச்சித் தத்துவார்த்த கட்டமைப்பை உருவாக்கிய அவர் அதனை இலங்கைத்தீவிற்குள் தமிழீழ தனியரசு உருவாக்கத்திற்கு தனது தத்துவத்தை பயன்படுத்தி பரீட்சித்துப்பார்க்க முனைவது நல்ல விடயம்தான்.
ஆனால் சீனப் பல்கலைக்கழகமும்(CUHK) சட்டப் பேராசிரியர் அலெக்ஸ் கிரீன்(Alex Green), TGTEயும் அணைந்து மேற்கொள்ளப்போவதாக குறிப்பிடப்படும் சுயாதீன தமிழ் அரசு(independent Tamil State) உருவாக்கத்திற்கு தற்போதைய அரசியல் மற்றும் எதிர்நிற்கும் சட்டரீதியான சவால்களை(legal challenges) குறிக்கோள்சார் கல்வி மதிப்பீடாக ஆய்வு செய்வதற்காக இந்த சீனப் பல்கலைக்கழகம்(CUHK) ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? என்ற முக்கிய விழிப்புணர்வுக் கேள்வி எழுகிறது.
அத்தோடு பிரித்தானியாவில் University College London, University of York, University of Cambridge, London School of Economics and Political Science போன்ற பிரசித்திபெற்ற international-law மற்றும் political-theory academic institutions இருக்கின்றபோதும் இந்த குறிப்பிட்ட ஆய்வு பிரித்தானியாவிலோ அல்லது அமெரிக்காவிலுள்ள, New York University, Harvard University, Yale University, Columbia University போன்றவற்றிலோ, கனடாவில் உள்ள University of Toronto, McGill University, University of British Columbia போன்ற பிரசித்திபெற்ற பல்கலைக்கழகங்களிலோ நடத்தப்படாமல் Hong Kongல் உள்ள CUHK ல் நடத்தப்படுவதற்கான காரணம் என்ன?
இதற்கான விடையைத் தேடி அறிவுசார்ந்தும், அரசியல்த் தத்துவவியல் சார்ந்தம் சிந்திப்பது அவசியம்.
இத்தகைய ஆய்வென்றை செய்யமுன்வந்ததற்காக CUHK தமிழீழத்தை ஆதரிக்க முடிவு செய்துவிட்டது என்று ஈழத்தமிழர் எண்ணுவது வடிகட்டிய முட்டாள்த்தனமாகும்.
சீனா அரசுடன் இலங்கை அரசு
இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அதிகாரப்பூர்வ CUHK அறிவிப்பு இதனை சார்பற்ற கல்விசார் மதிப்பீடு(objective academic assessment ) என்றுதான் வரையறுக்கிறது.

அதே நேரத்தில், “சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று தமிழீழ அரசுரிமை குறித்து TGTE உடன் இணைந்து ஆய்வு செய்கிறது” என்பது முற்றிலும் புவிசார் அரசியல் முரண்பாட்டைக்(geopolitical contradiction) கொண்டுள்ளது என்பதனால் இது குறித்த ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது அவசியமானது.
அதைவிடுத்த இதனை ஆகா ஓகோ எனப் புழகாங்கிதமடைவது ஈழத்தமிழர் தமக்கான பொருத்தமான வெளியுறவுக் கொள்கையை கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதாகவே அமையும்.
சீனா அரசு இலங்கை அரசுடன் நீண்டகால நெருக்க உறவை கொண்டுள்ளது, சீனா பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை குறித்து மாறாத பாரம்பரிய நிலைப்பாட்டை கொண்டது.
அதேசமயம Hong Kong சீனாவின் இறையாண்மைக்குட்பட்டது. ஆனால் இந்த CUHK என்ற பல்கலைக்கழகம் தனித்தமிழ் அரசு குறித்த கல்வி ஆராய்ச்சியை TGTE என்ற சுதந்திர தமிழிழ அரசை ஸ்தாபிக்க முனையும் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது என்பது விசித்திரம்தான்.
இவற்றை ஒன்றாக இணைத்து ஆராய்ந்தால் இது ஒரு சாதாரண பல்கலைக்கழக ஆய்வைத் தாண்டி சர்வதேசச் சட்டம் + சுயநிர்ணய உரிமை + அரச அங்கீகாரம் + சீனா-இலங்கை புவிசார் அரசியல் + நாடுகடந்த தமிழரசியல்(international law + self-determination + statehood + China–Sri Lanka geopolitics + transnational Tamil politics) ஆகியவற்றின் தொகுப்பாக மாறுவது ஈழத்தமிழர் அரசியல் தற்கொலைக்கு தாயரிவிட்டார்கள் என்பதையே வெளிக்காட்டும்.
இன்றைய மாறிவரும் உலகச் சூழலில் இந்துசமுத்திரத்தின் அரசியல் பெரும் கொதிநிலையை அடைந்திருக்கிறது. ம
த்திய கிழக்கு யுத்தமும், இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ச்சியும், அதற்கு ஈடுசெய்யக்கூடிய வகையில் இந்தியாவின் கடல்சார் விஸ்தரிப்புகளும், அமெரிக்க கடற்படையின் இந்து சமுத்திர மேலாதிக்க நடவடிக்கைகள் என ஒரு புதிய மாற்றத்தை நோக்கி இந்துசமுத்திர அரசியல் நகர்கிறது.
இந்நிலையில் ஈழவிடுதலைக்காக போராடுகின்ற அமைப்புகள் யாருடன் கூட்டுச் சேர்வது? என்பது மிகமுக்கியமானது. சட்டி சுட்டு விட்டது என்பதற்காக அடுப்பை தகர்க்க முடியாது, தகர்க்கவும் கூடாது.
கடந்தால கசப்பான அனுபவங்கள் நிகழ்கால கூட்டிணைவிற்கு தடையாக இருக்கக் கூடாது.
இதனை ஜப்பானின் அமெரிக்க தொடர்பான வெளியுறவுக் கொள்கையிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இலங்கைத்தீவின் இருப்பிடம் இந்தியா உபகண்டத்திற்கு நெருக்கமாக அமைந்திருப்பதனால் அது எப்போதும் இந்திய பாதுகாப்பு வலயத்துக்குள் அகப்பட்ள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் இருந்து யாரை எதிர்ப்பது? யாரை நண்பனாக்குவது? என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் இந்தியாவை நாம் நண்பனாக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் பகைவனாக்ககூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கும், அதனுடைய பிராந்திய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படக்கூடிய எந்த ஒரு காரியத்திலும் ஈழத்தமிழர்கள் ஈடுபடக்கூடாது.
17 ஆண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு தூதரகங்கள்
சீனாவைப் பொறுத்தளவில் அது இலங்கையுடன் நெருக்கமான உறவைக் கொண்ட நாடு என்ற அடிப்படையிலும், அது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்பு கடல் நகரத்தையும் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையிலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவில் எந்த விரிசலும் ஏற்படப்போவதில்லை.

இந்நிலையில் ஈழத் தமிழர்கள் சீனாவை நண்பனாக்க முடியும் என்றால் அதற்கான மூலோபாயம் என்ன? இலங்கை அரசு சீனாவுக்கு கொடுக்கின்ற நலன்களை விட ஈழத்தமிழர்களால் ஏதேனும் பெரிய நலன்களை இன்றைய நிலையில் சீனாவுக்கு கொடுக்க முடியுமா? என்றால் இல்லவே இல்லை.
அதேபோல போராட்ட காலத்தில் விடுதலைப் போராட்டம் சீனாவுடன் கொண்டிருந்த இரகசிய பின்கதவு உறவே இந்து சமுத்திரத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி புதைத்து விட்டது என்ற உண்மையை நாம் தெரிந்து அதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதேபோன்ற ஒரு தவறை இனியும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆகவே ஈழத் தமிழர்கள் சீனாவுடன் உறவை வளர்ப்பது என்பது அரிதிலும் அரிது என்பது மட்டுமல்ல ஆபத்தானதும்கூட. ஆகவே சீனாவை எதிர்ப்பதை விட சீனாவை ஈழத்தமிழர்கள் தவிர்ப்பதே அவர்களுடைய எதிர்கால நலனுக்கு உகந்தது.
ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான ஐ.நா மனித உரிமை அவையிலன் தீர்மானங்களை சீனா தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.
அத்தோடு ஈழத்தமிழர் பிரச்சினை என்பதை அது உள்நாட்டு பிரச்சினை என்றும், அது இலங்கையின் இறையாண்மைக்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும் சீனா சொல்கிறது.
கடந்த 17 ஆண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு தூதரகங்களுக்குள் எந்த ஒரு தமிழர்களையும் ஈழத்தமிழர் பிரச்சினை சார்ந்து பேசுவதற்கு உள்ளே அனுமதிக்கவில்லை என்ற கசப்பான உண்மையை இங்கு பதிவு செய்வது அவசியமானது.
இந்நிலையில் தமிழீழ தனியரசு அமைப்பதில் உள்ள சர்வதேச சட்ட முறைமைகள் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்ய சீன பல்கலைக்கழகம் முன்வந்தால் அந்த ஆய்வுக்கு தமிழீழ விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழர் அமைப்புக்கள் இணைத்து செய்யப்படக்கூடாது.
இதனை சுயாதீனமானவர்கள் மேற்கொள்ள வேண்டுமே தவிர் அமைப்புக்கள் சீனப் பல்கலைக்கழகங்களுன் இணைந்து செயல்படுவது மிகமிக ஆபத்தமான நிலைக்கே ஈழத்தமிழர்களை கொண்டு செல்லும்.
அமைப்புகள் இணைகின்றபோது ஈழ விடுதலை அமைப்புகள் சீனாவுடன் கூட்டிச்சேர்கின்றன என்ற சர்வதேச பார்வை ஒன்று தோன்றும். அது ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்குலகத்தையும், இந்தியாவையும் ஓரணியில் நிற்க வைக்கும்.
தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஈழத்தமிழினம்
வெறும் ஒரு பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுசரணையாக நிற்பதன் மூலம் மேற்குலக சீற்றத்தையும் அழுத்தத்தையும் தமிழர்களுக்கு எதிராக திருப்பிவிடும் சூழலையே அது தோற்றுவிக்கும்.
இதனை தமிழர் அமைப்புக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல ஈழத் தமிழருடைய வேணாவாவாக தமிழ் ஈழத் தனியரசை அமைப்பதாகும்.

இத்தகைய இலட்சியத்தை கொண்டிருக்கிறபோது சீனப் பல்கலைக்கழகம் ஒன்று “இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு உருவாக்குவதற்கு எதிர்நோக்கும் சர்வதேச சட்டரீதியான சவால்கள்“ என்ற தலைப்பில் ஒரு முதுகலை ஆராய்ச்சி திட்டத்தை அறிவிப்பு செய்கின்றபோது அதனை நோக்கி ஏராளமான தமிழிழ விரும்பிகளும், தேச நிர்மாணிகளும், கல்விமான்களும் செல்லவர்.
அவர்களை இலங்கை அரசு இனங்காண்பது இலகுவாகிவிடும். அத்தோடு இந்த ஆய்வு எந்தப் பலனையும் இறுதியில் தராத பட்சத்தில் மேற்குறிப்பிட்ட அனைவரும் விரக்தி அடைந்து தமிழீழ விடுதலை என்ற அந்த இலட்சிய பாதையில் இருந்து விலகிச் செல்வதற்கும் அது வழிவகுக்கும்.
நான்கு நுாற்றாண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஈழத்தமிழினம் இனியும் அடிக்கடி தோல்விகளை சந்திக்கக் கூடாது.
நாம் தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் நாம் மீண்டும் மீண்டும் தோல்வியை நோக்கியே பயணப்படுகிறோம் என்பதே அர்த்தமாகும்.
ஆகவே முரண்பட்ட சர்வதேச விவகாரங்களில் மிக நிதானமாகவும், பொருத்தமானதாகவும் ஈழத் தமிழர்கள் தமது தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். "தீதும் நன்றும் பிறர் தர வாரா".
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 07 September, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.