வட மாகாணத்தில் கடுமையான மணல் பற்றாக்குறை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வட மாகாணம் தற்போது கடுமையான மணல் பற்றாக்குறை என்ற மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக இலங்கை தேசிய நிர்மாண சங்கம் வடமாகாண கிளையின் தலைவர் ந. நந்தரூபன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை வீடமைப்பு, அரச அபிவிருத்தித் திட்டங்கள், தனியார் கட்டுமானங்கள் மட்டுமல்லாது, கட்டுமானத் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் கொண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் கடுமையாக பாதித்து வருகிறது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கோரிக்கையில், ஒரு அடிப்படை கட்டுமானப் பொருளான மணல் இன்று சட்டபூர்வமான வழிகளில் கிடைக்காத நிலைக்கும், தாங்க முடியாத விலைக்கும் சென்றுள்ளது.
மணல் பற்றாக்குறை
அதே நேரத்தில், சட்டவிரோத சந்தைகளில் மணல் மிக உயர்ந்த விலைக்கு இலகுவாக கிடைப்பது, ஒழுங்குமுறை, கண்காணிப்பு மற்றும் நிர்வாகத் தோல்விகளைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

இது மணல் மாபியா கட்டுப்படுத்த முடியாததாலோ, நிர்வாக பலவீனங்களாலோ, அல்லது நிறுவனத் தோல்வியாலோ ஏற்பட்டிருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும், வட மாகாண அபிவிருத்தி நேரடியாக முடக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
உடனடி நடவடிக்கை
உடனடி கட்டமைப்பு தீர்வுகள் அவசியம் பொறியாளர்களாக, பிராந்திய அபிவிருத்தியை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகளில் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டியது எங்களின் கடமை என நாங்கள் நம்புகிறோம்.
அதன் அடிப்படையில், மாண்புமிகு ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒழுங்குபடுத்தப்பட்ட மணல் யார்டுகளை (Sand Yards) அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இத்தகைய மணல் யார்டுகள்
• மணல் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய
• அநியாய விலை உயர்வுகளை கட்டுப்படுத்த
• சட்டவிரோத மணல் விநோயகத்தையும் இலஞ்சங்களையும் உடைக்க
• அனுமதிக்கப்பட்ட கட்டுமானங்களுக்கு தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய உடனடி தேவையாகும்.
ஆற்றுமணல் சார்பை குறைக்கும் பொறியியல் புதுமைகள்
அதே நேரத்தில், தொடர்ந்து ஆற்றுமணலையே சார்ந்து செயல்படுவது நிலைத்தன்மையற்றதும், தொழில்முறை ரீதியாக பொறுப்பற்றதுமான செயல் என்பதை தெளிவாகக் கூற வேண்டியுள்ளது.
இன்றே கிடைக்கக்கூடிய, தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கப்பட்ட மாற்றுத் தீர்வுகளை உடனடியாக ஊக்குவிக்க வேண்டும். அதில் முக்கியமாக
• Manufactured Sand (M-Sand) – ஆற்றுமணலுக்கு நேரடி மாற்றாக
• Precast கட்டுமான முறைகள் – இடத்திலேயே மணல் பயன்பாட்டை பெரிதும் குறைக்கும்
• இலகுரக கற்கள் (Lightweight Blocks) மற்றும் நவீன plaster முறைகள்
• பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் Tokyo Supercast Plaster Master போன்ற, மணல் பயன்பாட்டை குறைக்கும் அல்லது மணல் தேவையற்ற புதுமையான கட்டுமானப் பொருட்கள் இவை அனைத்தும் உலகளவில் பயன்பாட்டில் உள்ளவை.
இங்கு குறைவாக இருப்பது கொள்கை வழிகாட்டலும், தொழில்முறை ஒப்புதலும், நிறுவனத் தைரியமும் ஆகும்.
தொழில்நுட்ப அறிவு
பொறியியல் தலைமைக்கான அவசர அழைப்பு இலங்கை பொறியாளர் சங்கம் (IESL) போன்ற அமைப்புகள், இந்நிலையில் தொழில்நுட்ப வழிகாட்டுதலையும், கொள்கை தாக்கத்தையும் வழங்க வேண்டிய தார்மீக மற்றும் தொழில்முறை பொறுப்பை கொண்டுள்ளன.
இந்த பிரச்சினையில் பொறியாளர்கள் முன்னணியில் வராவிட்டால், முக்கிய முடிவுகள் தொழில்நுட்ப அறிவு இல்லாத, சுயநலக் குழுக்களின் கைகளில் தொடர்ந்தும் இருந்து, நீண்டகால அபிவிருத்திக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
மேலும் தாமதமின்றி உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளையும், கொள்கையமைப்பாளர்களையும், தொழில்முறை நிறுவனங்களையும் வலியுறுத்துகிறோம். ஒரு அடிப்படை வளம் அபிவிருத்திக்கு தடையாக மாறும் நிலையை, வட மாகாணம் இனி சகிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri