எதிர்பார்க்கப்பட்ட ஈரான் மீதான அழித்தொழிப்பு தாக்குதல்
உயிரை உயிர் உண்டு வாழ்வதே உயிர் வாழ்வு" உயிரிகள். சுயநலமானவை. ஒரு உயிரின் மரணம் இன்னொரு உயிரின் உணவாகிறது. இது மனிதனுக்கும் பொருந்தும். மனிதத் தேவைகளுக்கு ஏற்ப வளங்கள் போதுமானதாக பூமிப்பந்தில் இல்லை.
வளங்களுக்காகவே மனிதனுக்கு இடையிலான போட்டி தவிர்க்க முடியாதது. மனிதத் தேவைகளுக்கான யுத்தங்களும் கொலைகளும் தவிர்க்க முடியாதவை. யுத்தங்களற்ற ஒரு சமாதான உலகத்தை மனித குலம் ஒருபோதும் காண முடியாது.
ஆகவே யுத்தங்கள் இந்த பூமியில் மனிதகுலம் இருக்கும் வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆயினும் இன்றைய உலக அரசியலில் நாடுகளின் இருப்புக்கான யுத்தங்கள் ஏன் எப்படி எதற்காக நடைபெறுகின்றன என்பதை ஈரான் மீது மேற்கொள்ளப்படுகின்ற அழித்தொழப்பு யுத்தத்தில் இருந்து பகுப்பாய்வு செய்யலாம்.
மத்திய கிழக்கு யுத்தம்
அரசு என்ற நிறுவனம் எப்போது தொடங்கியதோ அன்றிலிருந்து மனிதன் மனிதனைக் கொன்றே அரசு என்ற நிறுவனத்தை கட்டமைப்புச் செய்துள்ளான். அரசு என்பது ஒரு கொல்லும் கருவி. மனிதர்களை அடக்கும் அரசு என்ற இயந்திரம் இயங்குவதற்கும், சுழல்வதற்கும் இரத்தம் காய்ச்சப்படுவது அவசியமாகிறது.
ஆகவே அரசு என்கின்ற இயந்திரம் பேரரசாக வளர்ச்சி அடைகின்றபோது அது ஏனைய அரசுகளை அடக்கும், ஒடுக்கும், அழிக்கும். அத்தகை அரசுதான் அமெரிக்கா மற்றும் மேற்குலக அரசுகள். இவை உலகின் ஆசிய ஆபிரிக்க கண்ட அரசுகளை அடக்கி ஒடுக்கி அல்லது மேலாண்மைக்கு உட்படுத்துவதன் மூலம் தமக்கான தேவைகளையும் மூலவளங்களையும் சுரண்டி செல்கின்றன.

அதற்கு எந்த அரசுகள் தடையாக இருக்கின்றனவோ அவற்றின் மீது போர் தொடுக்க ஒரு போதும் பின்நின்றதில்லை. அத்தகைய போர்தான் மத்திய கிழக்கில் நடக்கும் தொடர் தாக்குதல்கள். இன்றைய மத்திய கிழக்கு யுத்தம் என்பது இன்றோ நேற்றோ ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல.
அது 3000 ஆண்டுக்கு முன்னர் நடந்ததாக கூறப்படும் ரொயன் யுத்தத்தில் இருந்து ஆரம்பமானர். ஈரானை மையப்படுத்திய நிலப்பரப்பில் பேரரசுதான் உலகின் முதலாவது பேரரசு. அந்தப் பேரரசு கிழக்கு ஐரோப்பாவில் இருந்த ஸ்பாட்டா நகர அரசின் மீது போர் தொடுத்தது அதன் தொடர்ச்சி சிலுவை யுத்தமாகவும், அதன் பின்னர் மத்திய கிழக்கு யுத்தமாகவும் தொடர்கிறது.
ஆகவே மேற்குலகம் என்று சொல்லப்படுகின்ற வெள்ளைக்கும் மத்திய கிழக்கு எனப்படுகின்ற பச்சைக்கும் இடையிலான யுத்தம் தொடர்கதையாகவே நீடிக்கும். மேற்குலகத்தின் பூகோளம் தழுவிய அரசியல் நலனுக்காவே மத்தியகிழக்கில் யுத்தத்தை தொடர்கிறார்கள். இதனை ஒரு புவிசார் யுத்தமாக இஸ்லாமியர்களால் எதிர்கொள்ளப்படுவதோடு தமது நலன்களை பாதுகாப்பான தற்காப்பு யுத்தமாகவும் எதிர்கொள்கிறார்கள்.
இங்கே மேற்குலகம் தமது உலகம் தழுவிய அரசியல் பொருளியல் நலன்களை அடைவதற்கான தடைகளை உடைப்பதற்கான வலிந்த அழித்தொழிப்பு யுத்தத்தை நடத்துகிறார்கள் என்பதுவே உண்மையாகும். யுத்தம் என்று வந்து விட்டால் முதலில் கொல்லப்படுவது உண்மை. அதன் பின்னர்தான் நீதியும், நியாயமும், மனித உயிர்களும் கொல்லப்படும்.
யுத்தத்தில் வெற்றி பெற்றவனால் விதிக்கப்படுவதுதான் நியாயமாகவும், தர்மமாகவும் தோற்றம்பெறும். வெற்றி பெற்றவனை நியாயப்படுத்துவதற்கும், அவனுடைய நலன்களை அடைவதற்குமான வரையறைகளும் ஒழுங்கு விதிகளுமே நீதியாகவும் நியாமங்களாகவும், ஜனநாயகமாகவும் காட்டப்படும்.
இதனை அதிகார ஒழுங்கு கோட்பாட்டில் பிரான்ஸ்சிய தத்துவஞானி மிசையில் பூக்கோ குறிப்பிடுகிறார். அதிகாரமே ஒரு செய்தியை எவ்வாறு வெளியிட வேண்டும், எவ்வாறு பரப்ப வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. ஒரு மக்கள் கூட்டம் எவ்வாறு வாழ வேண்டும், எதனைச் செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது.
ஈரான் மீதான தாக்குதல்
குடும்ப நடைமுறைகளில் இருந்து சமூக நடைமுறைகளில் தொட்டு நாடுகளுடையன ஒழுங்கு நடைமுறைகள் அனைத்தும் அதிகாரத்தின்பால் அடங்குகிறது. இன்றைய உலகம் தழுவிய ஒழுங்கு நடைமுறை என்பது யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ அந்த அதிகாரத்தினால் நிர்ணயம் பெறுகிறது என்பதே உண்மையாகும்.
இதனை இன்றைய ஈரான் மீதான தாக்குதலும், அதன் பின்னரான உலகம் தழுவி ஊடகங்களின் செய்திகளும், பரப்புரைகளையும் ஊற்று அவதானித்தால் ஈரானில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் அனைத்தையும் இதுதான் நிலைமை, இது இப்படித்தான் என normalise (இயல்பாக்கம்) செய்யப்படுகிறது என்ற தத்துவார்த்த உண்மை புரியும்.

உலகளாவிய அரசியலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவும், உலகம் தழுவிய மூல வளங்களை தமது நாட்டுக்கு சுரண்டி செல்கின்ற அமெரிக்காவின் உலகந்தளவிய தேசிய நலனுக்காகவுமே மத்திய கிழக்கில் யுத்தங்கள் நடத்தப்படுகிறது. உலகம் தழுவிய அரசியல் பொருளியல்னுக்காக மூல வளங்களையும் சக்தி வளங்களையும் பெறுவதற்கு மத்திய கிழக்கு இன்றியமையாத புவியியல் மையப்பகுதியாக உள்ளது.
உலகின் அனைத்து கண்டங்களுக்குமான தொடுகடலாக இந்துசமுத்திரம் உலகின் தாய்கடலாகும். இந்தக் கடலின் ஒரு பகுதியில் மத்திய கிழக்கின் ஊடான கடல் போக்குவரத்து அத்தியாவசியமானது. மத்திய கிழக்கின் சக்தி வளங்கள் இந்த உலகின் இயக்கத்துக்கு இன்றியமையாதது. ஆகவே உலகம் தளவிய அரசியல் பொருளியலில் மத்திய கிழக்கு முதன்மையானதும் முக்கியத்துவமான ஒரு பிராந்தியமாகும்.
ஆகவே வல்லரசுகள் தமது ஏகோபோக நிலைமையை சக்திவளகளுக்கு உரிமை கொண்டாடுவதற்கு மத்திய கிழக்கில் உள்ள தடைகளை அகற்றுவதே மேற்குலகின் தேசிய நலனை அடைவதற்கான ஒரே மார்க்கமாகும். பிரித்தானியாவின் அறிஞரான யோன் மைக்கிண்டர் இருதய நிலக்கோட்பாடு “மத்திய ஐரோ-ஆசியப் பகுதியையும், மத்திய கிழக்கையும் யார் தமது கட்டுப்பாட்டுங்கள் வைத்திருக்கிறார்களோ அவர்களால் இந்த உலகத்தை ஆள முடியும் என்ற ஒரு புவிசார் அரசியல் கோட்பாட்டை முன்வைத்தார்.
அது முற்றிலும் இன்றைய காலத்துக்கு பொருத்தமானதாகவே உள்ளது. அதனாலேதான் உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும் யுத்தங்கள் தவிர்க்க முடியாததாகின்றன.
மேற்குலகத்தைப் பொறுத்தளவில் மத்திய கிழக்கில் பயத்தாலும், நயத்தாலும் அராபியர்களை தமதுநிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் பாரசீகர்களை அவ்வாறு கொண்டு வரமுடியவில்லை.
நீண்ட தொடர் யுத்தங்களில் ஏறத்தாழ ஒரு 3000 ஆண்டுகால யுத்தங்களில் ஈடுபட்ட யுத்த அனுபவ வரராற்றை கொண்ட அதனையே பண்பாட்டாகக் கொண்ட பாரசீகர்களின் பேரரசு காலகதியில் சுருங்கி இன்று ஈரான் என்ற ஒரு நாடாக மட்டுமே நிலைத்து நிற்கிறது. அத்தகைய ஈரானியர்கள் யாருக்கும் அடிபணியாமல் தொடர்ந்து யுத்தத்தை நடத்தக்கூடிய பண்பாட்டியல், உளவியல் சமூகமாக நிமிர்ந்து நிற்கிறார்கள்.
அவர்கள் மேற்குலகத்திற்கு நிகராக ஆயுத தளபாட உற்பத்தியும், பொறியலிலும் வளர்ந்து வருவதை மேற்குலகம் விரும்பவில்லை. அவ்வாறு வளர்ந்து வரும் பாரசீகர்களை கட்டுப்படுத்துவது இன்றைய உலகம் தளவிய அரசியலுக்கு அமெரிக்காவுக்கு தேவையாகவே உள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான யூததேசத்தின் இருபிக்கும் ஈரான் சவாலாக இருக்கிறது.
யூததேசத்தின் இருப்பு
ஈரானின் நவீன ரேன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்களும், அதனுடைய அணுவாராய்ச்சிகளும் யூததேசத்திற்கு சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமைவதனால் ஈரான்மீது ஒரு தொடர் அழித்தொழிப்பு யுத்தத்தை நடத்தை வேண்டியது அமெரிக்க அணிக்கு அவசியமானது. மேற்குலத்தவர்கள் ஈரானின் நிலப்பரப்பில் தரையிறங்கி ஒரு தரைசார் யுத்தத்தை ஒருபோதும் நடத்த மாட்டார்கள்.
அவ்வாறு தரைப்படையினரை இறக்கி ஆப்கானிஸ்தானில் நடத்தியது போன்று ஒரு யுத்தத்தை நடத்தினால் அமெரிக்க பேரரசு மீளமுடியாத ஒரு யுத்தசகதிக்குள் புதைந்துவிடும். அவ்வாறு ஒரு யுத்த சகதிக்குள் அமெரிக்கா புதைவதை அதனுடைய போட்டி வல்லரசுகள் விரும்புகின்றன. ஆனால் அந்த சகதிக்குளியாக ஈரான் இருப்பதை சீனா விரும்பாது.

ஏனெனில் மத்திய கிழக்கில் பெரிய யுத்தம் நடைபெறுவது என்பது சீனாவின் பொருளியல் வளர்ச்சிக்கும், வர்த்தகத்திற்கும், அதனுடைய நீண்டகால பட்டுப்பாதை வியூகத்திற்கும் பாதகமாதாக அமைகிறது. ஆகவே இந்த யுத்தத்தில் சீனா நேரடி பங்கை வகிக்காமல் விலகியே நிற்கும். அமெரிக்காவைப் பொறுத்தளவில் ஈரான் மீதான வரையறுக்கப்பட்ட தாக்குதலை மட்டுமே நிகழ்த்தும்.
ஏனெனில் ஈரான் ஒன்பது கோடி மக்களை கொண்டுள்ள நாடாயினும் பாரசீகர்கள் எனப்படுகின்ற சியாமுஸ்லிம்கள் எட்டு கோடி உள்ளனர். பெரும் ஜனத்தொகையை கொண்ட பாரசீக உள்ளுணர்வுள்ள சியாம் முஸ்லிம் அடிப்படைவாத கருத்தியலில் ஈரானிய தேசியவாதமாக திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் மீது ஒரு பெரும் போரை நடத்துவது என்பது ஒரு தொடர் பேரழிவையும், பொருளாதாரப் பின்னடைவுகளையும் ஏற்படுத்தும்.
ஆகவே எதிரியின் வளர்ச்சியை ஒரு மட்டத்தில் வைத்திருந்து கட்டுப்படுத்துகின்ற போரியல் முகாமைத்துவத்தையே அமெரிக்கா கையாள்கிறது. அந்த முகாமைத்துவந்தான் அழித்தொழிப்பு தாக்குதல்கள் மூலம் எதிரியை வளரவிடாமல் பின் நோக்கித் தள்ளுவது. அதனைத்தான் கடந்த 50 வருடங்களாக மத்திய கிழக்கில் தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகிறது.
ஈரான் ஒரு அணு ஆயுத வல்லரசாக வளர்ந்து விட்டால் மத்திய கிழக்கில் யூததேசத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கிவிடும். ஈரானின் அணு ஆயுதங்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் கைகளுக்கு சென்று யூததேசத்தை அழித்துவிடும். அமெரிக்கா வரை அதன் கரங்கள் நீண்டுவிடும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கும் யூததேசத்துக்கும் இருக்கிறது.
இதனால் தான் ஈரானின் அணு விஞ்ஞானிகள் இராணுவத் தளபதிகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்கள் மூலம் கொலைசெய்து ஈரானின் வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.இறுதியாக கடந்த வரத்தில் ஈரானின் மிகமுக்கிய இராணுவ தளபதிகளையும் அணு விஞ்ஞானிகளையும் வான்வழித் தாக்கல் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அத்தோடு ஈரானுடைய அணுத்தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையங்கள் தாக்கப்பட்டு இருக்கின்றன. எல்லாவற்றிக்கும் மேலாக ஈரானின் அதி உச்ச தலைவரான அயத்துல்லா அலிகொமேனி கொல்லப்பட்டு விட்டார், இத்துடன் அமெரிக்காவின் வரையறுக்கப்பட்ட தாக்குதல் நிறைவு பெற்று விட்டது என்று சொல்வதே பொருந்தும்.
ஆயினும் இந்த பெருமழைக்குப் பின்னான தூவானமாக ஈரானின் பழிவாங்கும் தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தொடரப்போவது தவிர்க்க முடியாததுதான். ஈரான் மீதான தாக்குதலில் தரைப்படைகளுக்கு எந்தப் பங்கும் பாத்திரமும் இருக்கவில்லை இங்கே விமானபடைக்கும் கடற்படைக்குமே பங்கம் பத்திரமும் இருப்பதனையே தாக்குதல்கள் உணர்த்துகிறது.
ஏவுகணை தாக்குதல்
அதிலும் குறிப்பாக “ஒலியை ஆள்பவனே இந்த உலகத்தை ஆள்வான் அல்லது ஒலியை ஆள்பவனே வெற்றிவாகை சூடுவான்“ என்பது இங்கே நிரூபணமாகிறது. ஈரான் மீதான அனைத்து தாக்குதல்களும் கடலில் இருந்தும், வானத்திலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல்களாகவே அமைந்திருக்கின்றன.
அதுவும் குறிப்பாக செய்மதி தொடர்பாடல் மூலம் வழிநடத்தப்படுகின்ற விமான, ஏவுகணை தாக்குதல்களாக, அனைத்தும் துல்லியமான வெற்றிகரமான தாக்குதலாக இடம்பெற்றிருக்கிறது என்பதிலிருந்து போர்க்களத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் விஞ்ஞான தொழில்நுட்பம் முக்கிய இடத்தை பெற்று விட்டதை மத்திய கிழக்கில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் உணர்த்துகிறது.

இவ்வளவு காலமும் அமெரிக்காவோ, இஸ்ராயிலோ ஈரான் மீது மேற்கொண்ட தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் கால ஓட்டத்தில் மறந்து போகும், மறைக்கப்பட்ட விடும். ஆனால் ஷியா முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவராகவும் அல்ஹாவின் குறியீடு என்று அழைக்கப்படுகின்ற அயத்துல்லா என் குறியீட்டுப் பெயருடைய அலி கொமேனியை கொன்றதை ஷியா முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கப்போவதில்லை.மன்னிக்கப் போவதுமில்லை.
இது வரலாற்று ரீதியான ஒரு பெரும்பகையை தோற்றுவித்திருக்கிறது. மறக்கப்பட முடியாத பகைவன்மத்தை இது ஒரு நீண்டகால தொடர் வரலாற்றாக கடத்தப்படப்போகிறது என்பது மட்டும் உண்மை. 86 வயது முதிர்ந்த ஷியாம் முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவரான அயத்துல்லா அலி கொமேனி இன்னும் சிறிது காலமே மட்டுமே உயிரோடு வாழ்ந்து இருக்க முடியும்.
ஆனால் அவரைக் கொன்றதன் மூலம் ஒரு தீராத வன்மமான பகையை மேற்குலகத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் சம்பாதித்துக் கொடுத்துவிட்டார். இந்த நிகழ்வு ஈரானியர்களை மேலும் ஐயப்படுத்தவும், ஈரானிய தேசியவாதத்தை மேலும் வளர்த்துச் செல்லவுமே வழிசெய்திருக்கிறது என்று சொல்வதே பொருந்தும்..
ஈரான்மீது அமெரிக்காவும், இஸ்ரேயிலும் மேற்கொண்ட மிகக் கடுமையான வான்வழித்தாக்குதல்களினால் ஈரானின் அடிக்கட்டுமானங்கள் பெரியளவில் சேதம் அடைந்திருப்பது உண்மைதான்.
ஆயினும் இந்த நிலைமையிலும் ஈரான் சமாதான பேச்சுக்களுக்கு இடமில்லை என்று சொல்லிவிட்டது என்பது மாத்திரமல்ல ஈரானின் மசூதிகளில் சிவப்புக் கொடி ஏற்றப்பட்டு இருப்பதும் அவர்கள் ஒரு தொடர் பழிவாங்கும் தாக்குதலை நடத்துவதற்கான சமிக்கையாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
இப்போது ஈரான் கோர்மூஸ் நீரணையை மூடியுள்ளது. இவ்வாறு வளைகுடா கடலுக்கான கடல்வழிப் பாதையை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு மூடிவைக்க முடியாது அவ்வாறு மூடிவைத்தால் உலக நாடுகள் அனைத்தும் இதனால் பாதிப்படையும். அனைத்து நாடுகளுடைய பொருளாதாரமும் வீழ்ச்சி அடையும்.
விவசாய உற்பத்தியில் இருந்து கைத்தொழில் உற்பத்திகள் வரை அனைத்து உற்பத்தி துறைகளும் பெரும் பாதிப்படையும். இதனை இன்றைய உலகப் பொருளாதாரத்தால் தாக்குப் பிடிக்க முடியாது. எனவே மத்திய கிழக்கில் விரைவாக ஒரு யுத்த நிறுத்தமோ சமாதான உடன்பாடு எட்டப்பட வேண்டியது அவசியமாகும்.
அமெரிக்காவுடன் தொடர்புடைய எண்ணெய் ஆலைகளை குறிவைக்கும் ஈரான்! மீள் தாக்குதல் தொடர்பில் கடுமையான எச்சரிக்கை
குற்றச்சாட்டுகள்
உலகம் நலன் சார்ந்தது அவரவர் தம் நலனுக்காக எதனையும் செய்வார். இங்கே ஈரானுக்கு நீதி கிடைக்கும் என்றோ, நியாயம் கிடைக்கும் என்றோ யாரும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால் ஈரானை சமாதானம மேசைக்கு கொண்டுவருவது அனைத்து நாடுகளுக்கும் அவசியமானது.
அமெரிக்கா கிரீன்லாந்து கைப்பற்ற போவதாக சொன்னதிலிருந்து ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் வரை இரண்டு மாதங்களாக ஐநா என்ற உலக பஞ்சாயத்து கொட்கையிலிருந்து எந்தக் கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

ஆனால் இப்போது உலகத்துக்கு பட்டினி வரப்போகிறது, உலகப் பொருளாதார முடங்கிப் போகப்போகிறது என்றவுடன் ஐநா செயலாளர் எனும் நாட்டாமை சில தினங்களில் வெளியே வரத்தான் போகிறார். பேச்சுவார்த்தைகள் நடத்தப்படத்தான் போகின்றன. மிகவிரைவில் ஐ.நா மன்றத்தில் விவாதங்கள் நடத்தப்பட போகிறது.
அமெரிக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு தீர்மானமும் அனேகமாக நிறைவேற்றப்படும். ஆனால் அதனை அமெரிக்க தனது வீற்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்துவிட்டு தன்பாதையில் சென்று கொண்டிருக்கும். அதனை அடுத்து வீற்டோ நாடுகள்ஒன்று சேர்ந்து ஒரு யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என நிபந்தனையை முன்வைப்பர்.
அதனை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் ஏனில் இனி அமெரிக்காவுக்கு தாக்குதல் தேவையில்லை, அவர்கள் தமது பொருளியல் நடவடிக்கைகளை ஈடுபடுவதற்கு ஒரு யுத்த நிறுத்தம் தேவை. ஆகவே வல்லரசு எதை விரும்புகிறதோ அதையே இந்த ஐநா மன்றம் தனது ஜனநாயக தீர்ப்பாகச் சொல்லும்.
ஐநா யுத்த நிறுத்தத்தை கொண்டு வந்து விட்டது ஐநாவின் பெரும் பங்களிப்பு இதுவென்று என்று உலக ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிடுவார்கள். யுத்தத்தின் பிரதியீடுதான் வர்த்தகம். வர்த்தகத்துக்கு தடை ஏற்பட்டால் யுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்த உலகம் நலன் சார்ந்தது நலன்களே முக்கியத்துவம் பெறுகின்றன.
அவரவர் நலங்களுக்காக தர்ம போதனைகள் நிகழ்த்தப்படும். மத்திய கிழக்கு யுத்தத்திற்கு முடிவு ஏற்படுமா, மத்தியகிழக்கு பிராந்தியம் சமாதானப் பிராந்தியமாக நிலவுமா? என்றால் இல்லவே இல்லை இந்த முரண்பாடு தவிர்க்க முடியாதது. கொரிய தீவகற்பத்தில் இப்போது ஒரு அமைதி நிலவுவதற்கு காரணம் வடகொரியா அணுவாயுத நாடாக மாறியமைதான்.
இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததும் அணு ஆயுதம்தான். ஆகவே மத்திய கிழக்கில் ஒரு சமாதானமும் அமைதியும் வேண்டுமானால் ஈரான் மிக விரைவாக தனது அணு ஆயுத தொழில்நுட்பத்தை நிறைவு செய்து ஒரு பரீச்சாத்த அணுகுண்டு வெடிப்பை செய்து காட்டிவிட்டால் மறுநிமிடம் மத்திய கிழக்கில் அமைதியும் சமாதானமும் நிலை நாட்டப்படும்.
ஆனால் அதற்கான வாய்ப்பை அமெரிக்காவோ, இஸ்ரேலோ ஈரானுக்கு வழங்குவார்களா என்றால் அது மிக அரிதானதுதான். ஆயினும் நடக்க மாட்டாது என்று சொல்வதற்கில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 15 March, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.