இலங்கைக்கு மீண்டுமொரு பொருளாதார அதிர்ச்சி! எரிபொருள் விலையில் நேரடி தாக்கம்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கை மீண்டும் ஒருமுறை பாரிய பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்துள்ள அவர்,
தற்போதைய அரசு இந்த நிலைமையைச் சரியாகக் கையாளத் தவறினால், அதன் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதே சுமத்தப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணெய் விலை உயர்வு
ஏற்கனவே பொருளாதார அழுத்தங்களையும், மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் பலவீனங்களையும் எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு, சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ள நாமல்,
ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் மார்க்கங்கள் முடக்கப்படும் அபாயம் உள்ளதால், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரித்து வருகின்றன. இது இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வெளிநாட்டு எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களின் இறக்குமதியைப் பாதிக்கும்.

இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள அரசு முறையான மற்றும் முன்கூட்டிய திட்டமிடல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நிர்வாகத் தவறுகள் ஏற்பட்டால் நாடு மீண்டும் ஒரு மனிதாபிமான மற்றும் பொருளாதார அதிர்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
போர் வெறும் இராணுவ இலக்குகளைத் தாண்டி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளை நோக்கி நகர்ந்துள்ளமை கவலைக்குரியது என்றும், இது இலங்கை போன்ற நுகர்வு நாடுகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒரு பேரழிவாக உருவெடுக்கக்கூடும் என்றும் நாமல் ராஜபக்ச எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam