எரிபொருள் விநியோகத்தில் QR முறைமை - பேக்கரி உரிமையாளர்களுக்கு கடும் சிரமம்
எரிபொருள் விநியோகத்தில் QR முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகளுக்காக கேன்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு முறையான QR குறியீட்டு முறைமை இல்லாமையினால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
பேக்கரித் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான அடுப்புகள் டீசல் மூலமே இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேக்கரி உரிமையாளர்கள்
ஏனைய துறையினருக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் விசேட நடைமுறைகளை வகுத்துள்ள போதிலும், பேக்கரி உரிமையாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாமை வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால், சந்தையில் பேக்கரி உற்பத்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன், அதன் பாதிப்புகளை பொதுமக்களே எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவுவதற்காக வர்த்தக, வணிக , கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்கவை தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ள ஊடகங்கள் பலமுறை முயற்சி செய்த போதிலும், அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.