வெளிநாடொன்றில் வளர்ப்பு நாய்க்கு அதிக உணவு வழங்கிய பெண்ணுக்கு சிறைத்தண்டனை
வளர்ப்பு நாயின் நிறையை பராமரிக்காத குற்றத்துக்காக¸ நியூசிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தின் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கத்தின் அறிக்கையின்படி, நுக்கி ( Nuggi)என்று பெயர் கொண்ட இந்த நாய், 2021ஆம் ஆண்டில் 54 கிலோகிராம் நிறையுடன், அசைவற்ற நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நுக்கி, அதன் உரிமையாளரின் இடமான ஒக்லாந்தில் இருந்து விலங்கு பராமரிப்பு மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டது.
நீதிமன்றின் தீர்ப்பு
குறித்த மையத்தின் பராமரிப்பில் இருந்த இரண்டு மாதங்களில் 8.8 கிலோகிராம் அளவு நிறை குறைந்த போதும், நுக்கி கல்லீரல் இரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்துள்ளது.
இந்தநிலையில், நாயின் மருத்துவ, நடத்தை மற்றும் உடல் தேவைகளை வழங்கத் தவறிய குற்றச்சாட்டை உரிமையாளர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, அவருக்கு ஒக்லாந்தில் உள்ள மனுகாவ் மாவட்ட நீதிமன்றம், இரண்டு மாத சிறை தண்டனையையும், 1,222 டொலர் அபராதத்தையும் விதித்தது.
அத்துடன், ஒரு வருடத்திற்கு நாய்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் உத்தரவிட்டது.
அதிக எடை
முன்னதாக, நுக்கியின் அதிக எடை காரணமாக, கால்நடை மருத்துவர்களால், அதன் இதயத் துடிப்பைக் கண்டறிய முடியவில்லை.
பொதுவாக நிறை குறைந்த, பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு உள்ள விலங்குகளை அன்றாடம் காண்கின்ற போதும், அதிக அளவில் உணவளிக்கப்பட்ட இந்த விலங்கு குறித்து நியூஸிலாந்தின் கால்நடை மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நாய்க்கு உலர் உணவுடன் தினமும் 10 கோழி துண்டுகள் கொடுக்கப்பட்டு வந்ததாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |