மலேசியாவில் உள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளைத் திரும்பப் பெற மியன்மார் ஒப்புதல்
மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ள மியன்மார் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ளூர் மக்களுக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கும் இடையே சமீபகாலமாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
5,000 அகதிகள்
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், மியன்மாருடன் மலேசியா வைத்துள்ள நல்லுறவு காரணமாகவே இந்தப் பேச்சுவார்த்தை சாத்தியமானதாகக் குறிப்பிட்டார்.

மியன்மாருக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ள 5,000 அகதிகளைக் கண்டறிந்து, அடையாளம் கண்டு, பரிசீலனை செய்யும் பொறுப்பு தனது அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னரே மியன்மாருடன் வெளியுறவுத்துறை மூலம் இறுதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பெப்ரவரி மாத நிலவரப்படி, மலேசியாவில் உள்ள ஐநா அகதிகள் அமைப்பில் சுமார் 1,26,000 ரோஹிங்கியா அகதிகள் பதிவு செய்துள்ளனர்.
ஐ.நா அகதிகள் அமைப்பு
மலேசியாவில் சட்டப்பூர்வ அகதிகள் சட்டங்கள் இல்லாததால், அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே கருதப்படுகின்றனர்.

தற்போது மியன்மாரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அகதிகளை அங்குத் திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஐநா அகதிகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேசச் சட்டங்களின்படி எந்தவொரு நபரும் ஆபத்தான சூழல் நிலவும் நாட்டிற்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படக் கூடாது என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.