சவூதி எண்ணெய் ஆலைகளை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகள் - நடுவானில் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு
சவூதி அரேபியாவின் யான்பு நகரில் உள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குறிவைத்து ஏமனில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவூதியின் வான் பாதுகாப்பு அமைப்பு இன்று சுட்டுவீழ்த்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்க படைகள் புதிய வான்வழி தாக்குதல்களை நடத்திய அடுத்த நாளே இச்சம்பவம் நடந்துள்ளது.
ஆபத்து நீங்கிவிட்டதாக அறிவிப்பு
செங்கடல் பகுதியில் அமைந்துள்ள யான்பு நகருக்குச் சவூதி சிவில் பாதுகாப்புத்துறை பல எச்சரிக்கைகளை விடுத்திருந்த பின்னர் ஆபத்து நீங்கிவிட்டதாக அறிவித்தது.

தெற்கே ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள ஜிசான் துறைமுக நகரத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தாக்குதல்களில் உடனடி சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
2021-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, சவூதியின் எரிசக்தி உள்கட்டமைப்பைப் பாதுகாக்க உதவி வரும் கிரேக்க இராணுவப்பணியாளர்களால் இந்த அமெரிக்க தயாரிப்பு 'பேட்ரியாட்' வான் பாதுகாப்பு அமைப்பு இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செங்கடலில் இரண்டு சவூதி மசகு எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அதன் நட்பு அமைப்பான ஹூதிகளுக்குக் "கடுமையான இராணுவத் தண்டனை" வழங்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
சவூதி அரேபியாவிற்கு எதிராக கடல்சார் முற்றுகை
ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவிற்கு எதிராக கடல்சார் முற்றுகையை அறிவித்துள்ளனர்.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முற்றுகையிட்டுள்ளதால், சவூதி அரேபியா தனது கோடிக்கணக்கான பெரல் மசகு எண்ணெயைக் குழாய் வழியாகச் செங்கடலுக்குத் திருப்பி அனுப்பி வருகின்றது.
அதன்படி, கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் போரினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், உலகளாவிய பணவீக்கமும் அதிகரித்துள்ளது.
இந்த வாரம் பிரெண்ட் கச்சா மசகு எண்ணெய் விலை மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பேரலுக்கு 100 டொலராக உயர்ந்துள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த சீனாவைத் தொடர்ந்து பாகிஸ்தானும் அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முயற்சி செய்து வருகிறது.