பாகிஸ்தான் மருத்துவமனை 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் , பிறந்த 14 குழந்தைகள் பலியான தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ விசாரணையில், தீவிர சிகிச்சை பிரிவில் தீ எச்சரிக்கை அலாரங்களோ அல்லது தானியங்கி நீர் தெளிப்பான்களோ இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், மீட்புப் பணிகளின் போது அவசரகால வெளியேற்ற கதவுகள் பூட்டப்பட்டோ அல்லது தடுக்கப்பட்டோ இருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சாரக் கசிவு காரணமாக
பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் (PIMS) கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரச அதிகாரி தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில், மின்சாரக் கசிவு காரணமாகத் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி மிகப்பெரிய பேரழிவாக மாறியதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் முறையான மற்றும் நிறுவன ரீதியான தோல்வியே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டல் பிரிவின் மின்சார கேபிள் அதிக வெப்பமடைந்ததால் ஏற்பட்ட மின்சாரக் கசிவே தீ விபத்துக்கு மிக முக்கியக் காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.4
கட்டடத்தில் புகை கண்டறியும் கருவிகள், தீ எச்சரிக்கை அலாரங்கள் அல்லது நீர் தீயணைப்பு அமைப்புகள் செயல்படவில்லை.
அலட்சியத்திற்குப் பொறுப்பான எட்டு அதிகாரிகள்
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஊழியர்களுக்கு, பிறந்த குழந்தைகளைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தோ, அவசரகாலத்தில் ஒட்சிசன் விநியோகத்தை எவ்வாறு துண்டிப்பது என்பது குறித்தோ எவ்வித பயிற்சியும் வழங்கப்படவில்லை.

குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்கவே கதவுகள் பூட்டப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் நியாயம் கற்பித்தாலும், அவசரகால வழிகளை அடைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அறிக்கை கண்டித்துள்ளது.
மேலும், தீ விபத்து தொடங்கி சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகே அவசர உதவி எண்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே அதே மருத்துவமனையின் தாதியர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு எச்சரிக்கப்பட்டும், நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.
இதையடுத்து, இந்த அலட்சியத்திற்குப் பொறுப்பான எட்டு அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்து பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கவும், அரச மற்றும் தனியார் கட்டடங்களில் தீ பாதுகாப்பு கணக்காய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.