சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் தீவில் HIV அதிகரிப்பு - வெளியான முக்கிய எச்சரிக்கை
பிஜி தீவில் எச்.ஐ.வி (HIV) பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அந்த நாடு தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளதுடன் பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்புச் சேவைகளை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுபிக் பிராந்தியத்தில் உள்ள இந்த நாட்டில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 167 பெரியவர்களில் ஒருவருக்கு எச்.ஐ.வி இருந்த நிலையில், தற்போது 60 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள்
மேலும், எச்.ஐ.வி தொடர்பிலான சிக்கல்களால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
பத்து இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பிஜியில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 2,016 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகப் சுகாதாரத்துறை அமைச்சர் அந்தோனியோ லலாபலாவு தெரிவித்துள்ளார்.

சாதாரண கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இனி போதுமானதாக இருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார். போதைப்பொருள் பயன்பாடு, பாதுகாப்பற்ற உடலுறவு, ஒரே ஊசியைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் "ப்ளூடூத்திங்" எனப்படும் ஆபத்தான போதைப் பழக்கம் ஆகியவை இந்தத் தொற்றுப் பரவலுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொற்று ஏற்படுவதற்கான காரணம் இதுவே..
போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்துபவர்கள், ஏற்கனவே போதையில் உள்ள ஒருவரின் இரத்தத்தை உறிஞ்சித் தங்கள் உடலில் செலுத்திக் கொள்ளும் மிகவும் ஆபத்தான பழக்கமே "ப்ளூடூத்திங்" அல்லது "ஹொட்ஸ்பொட்டிங்" எனக் குறிப்பிடப்படுகிறது.
போதைப்பொருளின் செலவைக் குறைக்கவும், பிஜியில் பற்றாக்குறையாக உள்ள ஊசிகளைச் சமாளிக்கவும் ஒரே ஊசியைப் பலரும் பகிர்ந்துகொள்ளும் இந்த முறை, வைரஸ் வேகமாகப் பரவ முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க பிஜி அரசாங்கம் புதிய ஊசி மற்றும் சிரிஞ்ச் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, போதிய இருப்பு உள்ள ஊசி மற்றும் சிரிஞ்சுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேலும், எச்.ஐ.வி குறித்த பயம் அல்லது கூச்சம் காரணமாக மக்கள் ஒதுங்கி நிற்காமல் தயக்கமின்றி முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், சமூகப் புறக்கணிப்பே மக்களைச் சிகிச்சையிலிருந்து தூரமாக்குகிறது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் UNAIDS அமைப்பின் தரவுகளின்படி, 2025 இல் பிஜியில் எச்.ஐ.வி உடன் வாழும் 9,100 பேரில், 39% பேருக்கு மட்டுமே தங்களுக்கு நோய் இருப்பது தெரியும் என்றும், 22% பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
உலகளவில் சராசரியாக 78% பேர் சிகிச்சை பெறும் நிலையில், பிஜியின் இந்த நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
இந்தத் தீவிரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவரக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் எனத் தேசிய எச்.ஐ.வி பணிக்குழுவின் தலைவர் ஜேசன் மிட்செல் தெரிவித்துள்ளார்.