அநுர அரசில் வீழ்ச்சிக் காணும் விவசாயம்..! திலித் ஜயவீர எம்.பி குற்றச்சாட்டு
எமது நாட்டின் முன்னோடியாக இருக்கும் விவசாயத்தை அநுர அரசு சட்டவிரோதம் எனக் கூறி, பாரம்பரியத்தைச் சீரழிக்க முற்படுகின்றது என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அம்பாறை - தெஹியத்தகண்டிய பிரதேச சபை மைதானத்தில் நேற்று(18.07.2026) இடம்பெற்ற “விவசாயிகளின் பேரணி - 2026” மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் வீழ்ச்சி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நமக்கென்று தனித்துவமான கலாசாரம் உள்ளது. உலகளாவிய மற்றும் பிராந்திய ரீதியில் நாம் முன்னேற்றமடைய வேண்டுமாயின், எமது கலாசாரத்தை அடித்தளமாகக் கொண்டே செயற்பட வேண்டும்.
உலகில் எந்தவொரு நாடும் தனது கலாசாரத்தைச் சீரழித்து முன்னேற்றமடைந்ததில்லை என்பதை அரசு உணர வேண்டும். இன்றைய விவசாயிகள் பெரும் நட்டங்களைச் சந்தித்து வருகின்றனர்.

நகைகளை அடகு வைத்தும், காணிகளை அடகு வைத்தும், உறவினர்களிடம் கடன் பெற்றும் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
விவசாயம் என்பது தங்களின் கடமை என்று கருதுவதாலேயே இந்தத் தொழிலில் அவர்கள் இன்றும் நிலைத்திருக்கின்றனர். விவசாயிகளை மீண்டும் வீழ்ச்சியடையாத வகையில் கட்டியெழுப்புவதற்கு “தொழில்முனைவு” அணுகுமுறை அவசியம்.
சர்வஜன அதிகாரம் என்ற ரீதியில், விவசாயிகளுக்கு மீண்டும் இவ்வாறானதொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படாதவாறு முறையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.




