செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ்.பல்கலையில்..!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 34 மனித என்புத் தொகுதிகள் யாழ். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட பாடசாலைப் புத்தகப் பை, பொம்மை, காலணி, சிறு வளையல் போன்ற பொருட்கள் நீதிமன்றக் கட்டுக்காவலில் சான்றுப் பொருட்களாகப் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மருத்துவ பீட சட்ட வைத்தியத்துறை
செம்மணிப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துரைத்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மூன்று நாட்கள் இடம்பெற்ற வேளையில் மழை காரணமாக நிறுத்தப்பட்டு பின் ஆறு நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தன.
அதன் பின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக 8 நாட்களாக இடம்பெற்று வருகின்றன.
மொத்தமாக நேற்று வரை 17 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 34 மனித என்புத் தொகுதிகள் நீதிமன்றக் கட்டுக்காவலில் எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி பிரணவனிடம் கையளிக்கப்பட்டன.
இவ்வாறு கையளிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சட்ட வைத்தியத்துறையில் உள்ள என்பு ஆய்வு கூடத்தில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரமும் பாதுகாப்பு
மேலும் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட பாடசாலை புத்தகப் பை, பொம்மை, காலணி, சிறு வளையல் போன்ற பொருட்கள் நீதிமன்றக் கட்டுக்காவலில் சான்றுப் பொருட்களாகப் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன.
தற்போது அகழ்வுப் பணிகள் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன. எந்தப் பொருட்களையும் ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
முழுமையாக அகழ்வுப் பணிகள் நிறைவு பெற்றதன் பிற்பாடே மனித என்புத் தொகுதிகள் சட்ட வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினரால் ஆய்வு செய்யப்படும்.
அதன்பின்னர் இறப்புக்கான காரணம், மீட்கப்பட்ட குறித்த என்புத் தொகுதிகள் ஆணா, பெண்ணா மற்றும் வயது என்பன அறிவிக்கப்படும்.
மேலும் ஆகழ்வுகள் முடிவுற்ற பின் கிடைக்கப் பெற்ற பிற சான்றுப் பொருட்களின் கால எல்லையைத் தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா வெளிப்படுத்துவார்.
மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டுள்ளது. யாழ். பொலிஸார் 24 மணிநேரமும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளும் இந்த விடயங்களில் அக்கறை செலுத்தி தொடர்ந்தும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வருகின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
