அநுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை
அநுராதபுரம், பரசன்கஸ்வெவ - வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது, 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பிரிகஸ்வெவ, வன்னி பளுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
உயிரிழந்த இளைஞருக்கும் மற்றுமொரு இளைஞருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட பகைமை காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்ற அநுராதபுரம் இலக்கம் 02 நீதிமன்ற நீதிவான் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
அத்துடன் உயிரிழந்த இளைஞரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.