வவுனியாவில் மின்சாரம் தடை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
மின்சாரம் தடைப்பட்ட நிலையில் 40 மணித்தியாலங்களில பின்னரே இணைப்பு வழங்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் நிலையில் யாழ். அலுவலகத்திற்கு முறைப்பாடு வழங்கப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனினும் உடனடியாக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பல வாடிக்கையாளரும் முன்வைத்து வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
மின்சாரம் இல்லாத நிலை
வவுனியா யாழ். வீதியில் உள்ள வீடொன்றிற்கு கடந்த ஐந்தாம் திகதி மின்சாரம் தடைப்பட்டதாக சுமார் 3.36 மணிக்கு மின்சார சபையின் யாழ் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட அலுவலகம் குறித்த வாடிக்கையாளருக்கு முறைப்பாடு கிடைத்ததற்கான குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது.
எனினும் தொடர்ச்சியாக வீட்டிற்கான மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்சார சபையை மீண்டும் தொடர்பு கொண்டிருந்தார்.
திருத்த பணிகள் இடம்பெறும் என்ற பதில் மாத்திரமே குறித்த வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரவு நேரமும் மின்சாரம் கிடைக்காத நிலையில் 24 மணித்தியாலம் கடந்து வாடிக்கையாளர் மீண்டும் யாழ் அலுவலகத்துடன் நேற்று (06.03) மாலையும் தொடர்பு கொண்ட போது வவுனியா அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டதோடு மீண்டும் முறைப்பாடு பெற்றுக் கொண்டமைக்கான குறுஞ்செய்தியும் அலுவலகத்தினால் அனுப்பப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் வவுனியா மின்சார சபை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்ட நிலையில் அங்கிருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே குறித்த தொலைபேசி அழைப்புக்கு பதில் அளித்துள்ளார்.
40 மணித்தியாலங்கள்
இது தொடர்பில் குறித்து வாடிக்கையாளர் தனியார் நிறுவன பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் தாங்கள் மின் தடைப்பட்டமைக்கு எவ்வாறு பொறுப்பு கூற முடியும் என கேட்டபோது, அவர் தனக்கு தரப்பட்ட உத்தரவை தான் பின்பற்றுவதாக தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் மின்சார சபையோடு தொடர்பை மேற்கொண்ட போதிலும் நேற்றைய தினம் ஆறாம் தேதி மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.
இதன்படி நேற்று 7ஆம் திகதி காலை 10 மணியளவில் சுமார் 40 மணித்தியாலங்கள் கழித்து திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்காக ஊழியர்கள் வருகை தந்து திருத்தப்பணியை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த செயற்பாடு மின்சார சபை பொறியியலாளரின் அசமந்தமே காரணம் என தெரிவிக்கப்படுவதோடு இவ்வாறான சம்பவங்கள் வவுனியாவில் அதிகளவில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான எழுத்து மூலமாக முறைப்பாடு ஜனாதிபதி செயலகம் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த வாடிக்கையாளரினால் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா! அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் என தென்கொரியா பதற்றம் News Lankasri

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri
