ஏர்பஸ் விமானக் கொள்முதல் சர்ச்சை! நாமல் தொடர்பில் நீதிமன்றில் அம்பலமான உண்மைகள்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணையின்போது மீட்கப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கும் ஏர்பஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ளன என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று(16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச நேற்றையதினம்(16) நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
ஏர்பஸ் பரிவர்த்தனை
ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக ராஜபக்சவிற்கும் ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்களை தடயவியல் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக அரசுத் தரப்புக்காக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்,

தடயவியல் விசாரணையின் போது, ஏர்பஸ் அதிகாரிகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல் தகவல்களை எங்களால் மீட்க முடிந்தது.
அந்த மின்னஞ்சல்கள், இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக சந்தேக நபர் செயல்பட்ட விதத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் குறிப்பிட்டார்.
ஏர்பஸ் அதிகாரிகள் இலங்கைக்குப் பயணம் செய்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடமும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் வாக்குமூலங்களை வழங்கியிருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் மகன்
அந்தப் பரிவர்த்தனை தொடர்பான வெளிநாட்டு தடயவியல் தணிக்கை ஆவணங்களையும் புலனாய்வாளர்கள் பெற்றிருந்தனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. புலனாய்வாளர்களால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், மார்ச் 23, 2013 திகதியிட்ட ஏர்பஸ் மின்னஞ்சல் ஒன்றும் அடங்கும்.
அதில், முன்மொழியப்பட்ட விமான விற்பனை தொடர்பான நிறுவனத்தின் தரப்பை "ஜனாதிபதியின் மூலமாக" அமைச்சரவையிடம் முன்வைப்பதாக "ஜனாதிபதியின் மகன்" உறுதியளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர்பஸ் விமானக் கொள்முதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிகள் தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான விசாரணை நடவடிக்கைகளின் போது இந்த சமர்ப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மற்றொரு சந்தேக நபராக உள்ள பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்குச் சொந்தமான பிஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
23ஆம் திகதி வரை விளக்கமறியல்
அந்த நிதிகளில் இருந்து 800,000 அமெரிக்க டொலர்கள், தொழிலதிபர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் கணக்கிற்குப் பின்னர் மாற்றப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 100 மில்லியன் ரூபாய்க்கு சமமான தொகை பின்னர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக, பெரேரா இலஞ்ச ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த சாட்சியத்திலும் பிரமாணப் பத்திரத்திலும் கூறியிருந்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

ராஜபக்சவின் வழக்கறிஞர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர். ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் அனில் சில்வா, அப்பணம் பெரேராவுக்குச் சொந்தமான கணக்கில் பெறப்பட்டதாக வாதிட்டதோடு, தனது கட்சிக்காரருக்கு எதிரான அரசுத் தரப்பின் வழக்கையும் மறுத்து, பணம் செலுத்தியது தொடர்பான குற்றச்சாட்டைக் கேள்விக்குள்ளாக்கினார்.
பணச்சலவை விசாரணையில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, ராஜபக்சவின் பிணை மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கவிருக்கும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஹவுதி தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை... சவுதி அரேபியாவுக்கு இடியை இறக்கிய அமெரிக்கா News Lankasri
முதன்முறையாக ஹாலிவுட்டில் ரீமேக்காக போகும் தமிழ் சினிமா படம்... விஜய் சேதுபதி படத்திற்கு கிடைத்த பெருமை Cineulagam