நாட்டிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளதாக மகிந்த தரப்பு விளக்கமளித்துள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகும் செய்தி
ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ச கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். மேலதிக சிகிச்சைக்காகவே அவர் சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளார்.
அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஒருசில ஊடகங்கள் இதனை திரிபுப்படுத்தி தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான அவசியம் ஷிரந்தி ராஜபக்சவுக்கு கிடையாது. நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னிலையாகுவார்.
அதிகாரம் நிலையற்றது
அதிகாரம் நிலையற்றது என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். ஆகவே போலியான கருத்துக்களை சமூகமயப்படுத்தி உண்மையை மறைக்க முடியாது. சகல சவால்களையும் நீதித்துறை ஊடாக எதிர்கொள்வோம் என்றும் விளக்கமளித்துள்ளார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (16) அதிகாலை சுமார் 1:10 மணியளவில் அவர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஷிரந்தி தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாகவும், நேற்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நேரத்தில், விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் FCID இன் கடிதத்தை திடீரென வழங்கியதாகவும் குடும்ப உறுப்பினர் விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்