ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மன்னார் நகர முதல்வர்
மன்னாரில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற பலர் தொடர்ச்சியாக கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலையினை தற்காலிகமாக மூடி கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தாமதிப்பது ஏன்? என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (18) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு கோவிட் தொற்று பரவி வந்த நிலையில் சில ஆடைத்தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்மைக்காலமாக மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கும் கோவிட் தொற்று உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் உள்ள குறித்த ஆடைத்தொழிற்சாலையினை தற்காலிகமாக மூடி கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தாமதிப்பது ஏன்?என்று தெரியவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை காரணமாக அணைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏன் அன்றாட கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எவ்வித தொழிலும் இன்றி உள்ள நிலையில், ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்றவர்கள் கடமைக்குச் செல்ல முடியும் என்றால் பயணத்தடையின் அர்த்தம் என்ன? என்பது தெரியவில்லை.
எனவே மன்னார் மாவட்டத்தில் குறைவடைந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் பலர் தற்போது கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே 'வரும் முன் காப்போம்' என்பதைக் கருத்தில் கொண்டு மன்னாரில் உள்ள ஆடைத்
தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூடி மாவட்டத்தில் ஏற்பட உள்ள பாரிய அபாயத்தைத் தடுக்க
அரச உயர் அதிகாரிகள் மற்றும் உரிய சுகாதாரத் துறையினர் துரித நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.