உலகளவில் 70 பேரில் ஒருவர் அகதி.. வெளியான அதிர்ச்சி தகவல்
உலகெங்கிலும் போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் காரணங்களால் 11.78 கோடிக்கும் அதிகமான (117.8 மில்லியன்) மக்கள் தங்களின் சொந்த இடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐநா அகதிகள் தூதரகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உலக மக்கள் தொகையில் தோராயமாக 70 பேரில் ஒருவர் அகதியாக வாழும் அவல நிலையைக் காட்டுகிறது. கடந்த பத்தாண்டுகளில் முதல்முறையாக, தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பிய அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒட்டுமொத்த அகதிகள் எண்ணிக்கையில் 4 சதவீதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இருப்பினும், அண்மையில் மத்திய கிழக்கில் வெடித்துள்ள பிராந்திய மோதல்களால் லெபனானில் இருந்து 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்களும், ஈரானில் 32 இலட்சத்திற்கும் அதிகமான மக்களும் உள்நாட்டிலேயே தஞ்சம் இழந்துள்ளதால் இந்தச் சிறு முன்னேற்றம் மங்கிப்போயுள்ளது.
பாதுகாப்பற்ற சூழல்
இந்த அகதிகள் பட்டியலில் 6.86 கோடி மக்கள் தங்களின் சொந்த நாடுகளுக்குள்ளேயே பாதுகாப்பற்ற சூழலால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாக வாழ்கின்றனர்.

மேலும், உலகளாவிய அகதிகளில் சுமார் 72 சதவீதத்தினர் வெனிசுலா (64 இலட்சம்), பாலஸ்தீனம் (60 இலட்சம்), உக்ரைன் (52 இலட்சம்), சிரியா (49 இலட்சம்), ஆப்கானிஸ்தான் (37 இலட்சம்), சூடான் (28 இலட்சம்) மற்றும் தெற்கு சூடான் (24 இலட்சம்) ஆகிய வெறும் ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
இவர்களைப் போன்ற அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் கொலம்பியா (28 இலட்சம்), ஜெர்மனி (27 இலட்சம்), துருக்கியே (24 இலட்சம்) மற்றும் உகாண்டா (19 இலட்சம்) ஆகிய நாடுகள் உலகளவில் முன்னிலையில் உள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.47 கோடிக்கும் அதிகமான அகதிகள் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர், இது ஐநா வரலாற்றிலேயே பதிவான மிகப்பெரிய எண்ணிக்கையாகும். இவர்களில் 92 சதவீதத்தினர் கொங்கோ குடியரசு, சூடான், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இருப்பினும், அவர்கள் திரும்பிய சொந்த நாடுகளில் இன்னும் முழுமையான அமைதியோ அல்லது நிலையான பாதுகாப்பான சூழலோ உருவாகவில்லை என்றும், மீண்டுமொரு வன்முறைச் சூழலுக்குள்ளேயே அவர்கள் நுழையும் அபாயம் உள்ளதாகவும் ஐநா அகதிகள் தூதரகம் கவலை கலந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 11 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri