குணமடைந்து மீண்டும் அரசியலுக்கு திரும்பிய குமார வெல்கம
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைகளின் போது தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்க மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள வெல்கம

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள பிரதமரின் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வெல்கம கலந்துக்கொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கலாநிதி ஹர்ச டி சில்வா, எரான் விக்ரமரத்ன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
தாக்குதலுக்கு பின்னர் சுகவீனம் அதிகரித்ததன் காரணமாக குமார வெல்கம, தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
மே 9 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டார்.பல அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
மகிந்த தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பின் ஆரம்பமான வன்முறைகள்

அலரி மாளிகையில் அன்றைய தினம் நடைபெற்ற முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள். கூட்டம் முடிந்த பின்னர், அலரி மாளிகை மற்றும் காலிமுத் திடல் ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்தன.