விடுமுறை நாட்களிலும் இரவு நேரங்களிலும் நடத்தப்படும் சோதனை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் முட்டை, கோழி இறைச்சி விலையை அதிகரிக்கும் வியாபாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரித்துள்ளது.
அத்துடன் விடுமுறை நாட்களிலும் இரவு நேரங்களிலும் இந்த சோதனைகள் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் விற்பனை பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாதவர்கள், குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள், காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதேவேளை பற்றுச்சீட்டுக்களை வழங்காதவர்கள், பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்கள், பொருட்களை விற்க மறுப்பவர்கள் மற்றும் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் விலைக் குறைப்பு மற்றும் விற்பனையை நடத்தி பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
பண்டிகைக் காலத்திற்காக மேற்கொள்ளப்படும் விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், கடந்த சில நாட்களில் 1200 சோதனைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை உயர்த்த முயற்சிப்பவர்கள் மீது புலனாய்வு அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
