வங்குரோத்துக்கு போர் காரணமல்ல! 13 வருட ஆட்சியாளர்கள் தொடர்பில் அநுர வெளியிட்ட தகவல்
"சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்தவொரு நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை. அத்தகைய நாடுகளில் குற்றவாளிகளே அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். எனவே, 2026 ஆம் ஆண்டை இலங்கையில் 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்பதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாற்றுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் நுவரெலியாவில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
நாட்டின் பொருளாதாரப் பின்னடைவு குறித்து உரையாற்றிய ஜனாதிபதி,
சட்டத்தின் ஆட்சியும் பொருளாதாரமும்
"யுத்தத்தால் தான் நாடு வீழ்ச்சியடைந்ததாகக் கூறப்பட்ட போதிலும், யுத்தம் முடிந்து 13 ஆண்டுகளின் பின்னரே நாடு வங்குரோத்து அடைந்தது. இதற்கு முறையற்ற பொருளாதாரக் கொள்கைகளும், ஊழல் மற்றும் மோசடிகளுமே உண்மையான காரணங்களாகும்.எந்தவொரு நெருக்கடியையும் தாங்கக்கூடிய பலமான பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்பி வருகின்றோம்."
சமீபத்திய டித்வா சூறாவளி அனர்த்தத்தின் போது, 1.2 டிரில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்ட போதிலும், வெளிநாட்டுக் கடன் பெறாமலும், பணம் அச்சிடாமலும் திறைசேரியில் இருந்த 50 ஆயிரம் கோடி ரூபாவைக் கொண்டு நிலைமையைச் சமாளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் எனும் தேசிய அச்சுறுத்தல்
போதைப்பொருள் வர்த்தகம் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பைச் சீர்குலைப்பதாக எச்சரித்த ஜனாதிபதி, பின்வரும் முக்கிய விடயங்களை வலியுறுத்தினார்.
அரசியல் தலையீடு
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அரசியல் பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
சமூகப் பாதிப்பு
போதைப்பொருள் சந்தையைப் பகிர்ந்து கொள்ளும் மோதல்களே நாட்டில் அண்மைக்கால துப்பாக்கிச்சூடுகளுக்குக் காரணமாகின்றன.
நிர்வாகச் சீர்குலைவு
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் கறுப்புப் பணம், அரச அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் விலைக்கு வாங்கப் பயன்படுத்தப்படுகின்றது. இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

அரச சேவை மற்றும் சம்பள உயர்வு
அரச சேவையை வலுப்படுத்துவதன் அவசியத்தைக் குறிப்பிட்ட அவர், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காகத் தலா 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 2027 இல் அதன் மூன்றாம் கட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கொடுப்பனவுப் பிரச்சினைகள் குறித்தும் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ஒருமித்த செயற்பாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு
"எமது பிள்ளைகள் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்குப் பலியாகாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பு. இதில் மதத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சட்டத்தை நிலைநாட்ட பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது." - என்றும் ஜனாதிபதி தனது உரையில் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயற்பட்ட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 62 பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.