அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கலாக மாறிய புதிய குடியேற்ற விதி..!
அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்தியர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள்,தற்போது விடுமுறைக்காக தங்கள் சொந்த நாடுகளில் இருந்தால், செப்டம்பர் 15-க்கு முன்பாக அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
புதிய குடியேற்ற விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள சலுகைகளை இழக்காமல் இருக்க இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர் விசா
இதுவரை F-1 மாணவர் விசா மற்றும் J-1 பரிமாற்ற விசா வைத்திருப்பவர்கள், தங்கள் கல்வி தொடரும் வரை "Duration of Status (D/S)" என்ற முறையின் கீழ் அமெரிக்காவில் தங்க அனுமதி பெற்றிருந்தனர்.
ஆனால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ள புதிய "Final Rule" படி, செப்டம்பர் 15 முதல் மாணவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதற்கு மேல் தங்க வேண்டுமெனில், USCIS-இன் (Form I-539) மூலம் அனுமதி பெறுவது கட்டாயமாகும். மேலும், படிப்பு முடிந்த பிறகு நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்டிருந்த 60 நாட்கள் அவகாசம், இனி 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வரும் நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில், புதிய விதிமுறை 60 நாட்களில் நடைமுறைக்கு வருகிறது.
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்! சூடுபிடித்துள்ள போராட்டக்களம்
புதிய குடியேற்ற விதி
எனவே, வகுப்புகள் தொடங்கும் செப்டம்பர் 8-க்கு முன்பாகவே அனைத்து மாணவர்களும் நியூயார்க்கு திரும்ப வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
DHS விளக்கத்தின் படி, செப்டம்பர் 15-ஆம் திகதி அமெரிக்காவில் D/S முறையின் கீழ் ஏற்கனவே இருக்கும் மாணவர்கள், தங்கள் Form I-20-ல் குறிப்பிடப்பட்டுள்ள படிப்பு முடியும் நாள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட OPT/STEM OPT பயிற்சி காலம் முடியும் வரை தங்கலாம். ஆனால், இந்த சலுகைக்கும் ஒரு வரம்பு உள்ளது.

புதிய விதியின் கீழ் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும், எந்த சூழ்நிலையிலும் 2030 நவம்பர் 14-க்கு பிறகு இந்த சலுகை நீடிக்காது. இந்த புதிய விதிமுறை இந்திய மாணவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக முனைவர் பட்டம் (PhD), மருத்துவப் பயிற்சி மற்றும் நீண்டகால ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Foundation for India and Indian Diaspora Studies (FIIDS) அமைப்பின் கொள்கை மற்றும் திட்டப் பிரிவு தலைவர் கந்தேராவ் கந்த் கூறுகையில், "நான்கு ஆண்டுகள் என்ற வரம்பு, தற்போதைய உயர்கல்வி அமைப்பின் நடைமுறைக்கு பொருந்தாது.
அமெரிக்க அரசு
இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க சராசரியாக 52 மாதங்களும், முனைவர் பட்டத்திற்கு சுமார் 5.7 ஆண்டுகளும் தேவைப்படுகிறது. இதனால் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை உருவாகலாம்.
ஆராய்ச்சி திட்டங்களும், அமெரிக்காவின் கண்டுபிடிப்பு வளர்ச்சியும் பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ஆராய்ச்சி ஆய்வகங்கள் திறமையான மாணவர்களை இழக்கும் அபாயம் இருப்பதுடன், பட்டமளிப்பு தாமதம், ஆசிரியர் நியமனங்களில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் உருவாகலாம் என FIIDS எச்சரித்துள்ளது.
புதிய விதிமுறையை உடனடியாக நடைமுறைபடுத்தாமல், மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பாதிக்கப்படாத வகையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.