சுயலாபத்திற்காக உசுப்பேற்றும் அரசியலிற்கு இடமளிக்காதீர்கள் : அமைச்சர் டக்ளஸ்
1986ம் ஆண்டு மே மாதத்திற்கும் 90ம் ஆண்டு மே மாதத்திற்கும் இடையில் இங்கு நடைபெற்ற எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களிடம் உத்தியோகப்பூர்வமாக வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வில் அவர் உரையாற்றுகையில்,
கண்ணிவெடி புதைக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றி மக்களிடம் காணிகளைக் கையளிக்கின்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல பகுதிகள் விடுவிக்கப்படவேண்டி இருக்கின்றது. அவற்றையும் விரைவாக மீட்டுத்தருவோம் என எனக்கு முன்னாள் உரையாற்றியவர்களும் குறிப்பிட்டிருந்தார்கள்.
ஆனால் இப்படியான நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நீண்டகால முன்வைத்து வருகின்ற கருத்தாகும். அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தோடு நாங்கள் வன்முறைக்கு முடிவு கட்டியிருப்போமாக இருந்தால் இந்த நிகழ்வுகள் ஏற்பட்டிருக்காது.
இடம்பெயர்வுகள், உயிரிழப்புக்கள், சொத்தழிவுகள் ஏற்பட்டிருக்காது என்பதை நான் அன்றிலிருந்து இன்றுவரை சொல்லிவருகின்றேன். பேச்சுவார்த்தைகளிற்கூடாக எமது பிரச்சினைகளைத் தீர்த்திருக்க முடியும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு அல்லது சிறுபிள்ளை வேளாண்மை விழைந்தும் வீடு வந்து சேராது என்று சொல்வது போல அன்றிலிருந்து இதைத்தான் நான் சொல்லி வந்திருக்கின்றேன்.
துரதிஸ்டவசமாக எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் எஞ்சியது அழிவுகளைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்தவகையில் எனது நிலைப்பாடு, இருப்பதைப் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கான முயற்சியைத்தான் நான் முன்னெடுத்த வருகின்றேன். அந்த வகையில் நீங்கள் எந்தளவுக்கு எந்தளவு பக்க பலமாக அணி திரள்கின்றீர்களோ அந்தளவுக்கந்தளவு இது வைரலாக சாத்தியப்படும். ஜெயபுரத்தில் 130 ஏக்கர் காணிகளைப் பொதுமக்களிடம் கையளித்திருக்கின்றோம்.
ளெகதாரி முனையில் 100 ஏக்கருக்கு மேற்பட்ட காணியை வயல் செய்வதற்காக வழங்கியிருக்கின்றோம். தனியாரால் சுரண்டுகின்ற நிலைமையை மாற்றி கரும்பு தோட்ட காணியை அங்கிருக்கின்ற மக்களிற்கு வழங்கியிருக்கின்றோம்.
ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் ஏறத்தழ 300 ஏக்கர் காணி மக்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று இன்று முகமாலையில் 316 ஏக்கர் காணியை மக்களிடம் வழங்கியுள்ளோம். இதைவிட, கரும்பு தோட்டத்திற்காக மேலும் 2500 ஏக்கர் காணி கோரப்பட்டிருக்கின்றது.
அந்த இடங்களையும் விரைவில் விடுவித்துக் கொடுப்போம். கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுடைய விவசாயம் செய்கின்ற காணிகள் அல்லது குடியிருப்பு காணிகள் இதுவரை கிடைத்திருக்காவிட்டால் அதனையும் விரைவில் கொடுப்போம். வர இருக்கும் காலங்களில் சுயலாபத்திற்கான உசுப்பேற்றும் அரசியலிற்கு இடமளிக்காதீர்கள்.
கடந்த வாரம் இங்கு வருகைதந்தபொழுது, இப்பகுதியில் இடியப்பத்தட்டு மற்றும் இடியப்ப உரல் விற்பனையில் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவரிடம் என்னுடன் வந்தவர்கள் அதனை வாங்குவதற்கான சென்றிருந்தபொழுது அமைச்சர் டக்ளஸ் இங்குதான் வந்து தங்கியிருக்கின்றார் என்று கூறியிருந்தனர். அப்பொழுது தேர்தல் பற்றிய கதைகள் வந்தது.
கடந்த முறை யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குத்தான் வாக்களித்ததாக அவர் கூறினார். இவ்வளவு செய்த டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஏன் வாக்களிக்கவில்லை என அவரிடம் வினவியுள்ளனர். இந்திய இராணுவம் இங்கு இருக்கின்றபொழுது அவர்களோடு சேர்ந்து அவர் சுட்டுக்கொண்டு திரிந்தார். அதனால்தான் அவருக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை எனக் கூறினார்.
துர்ரதிஸ்டவசமாக அப்பாவித்தனமாக அன்றிருந்தவர்கள் அவர் போன்ற பலரது மனங்களில் ஒரு விசத்தைத் தூவி விட்டிருந்தார்கள். 86ம் ஆண்டு மே மாதம் இந்தியாவிற்கு நான் சென்று 90ம் ஆண்டு மே மாதம்தான் நான் திரும்பி வந்தேன்.
எனக்கும் இங்கு நடைபெற்ற எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. இந்தியப் படை சொந்த நாட்டுக்குத் திருப்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் நான் இலங்கைக்கு வந்திருந்தேன். எனது தார்மிக கடமைக்காகவே இலங்கைக்கு வந்து மக்களினுடைய பிரச்சினைகளைக் கையிலெடுத்து அதனைத் தீர்ப்பதற்காக முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன்.
தேவையற்ற
வன்முறைக்கூடாக எமது மக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றார்கள்.
அதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்
வரும் காலங்களில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நீங்கள் சரிவரப்
பயன்படுத்துவீர்களாக இருந்தால், நிச்சயமாக விரைவானதும் கௌரவமானதும்,
ஒழிமயமானதுமான எதிர்காலம் கிடைக்கும் எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.