ஒமிக்ரோன் வைரஸ் ஏற்கனவே நாட்டுக்குள் பரவி இருக்கலாம் என சந்தேகம்
ஆபிரிக்க பிராந்திய நாடுகள் சிலவற்றில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் இலங்கைக்குள் ஏற்கனவே பரவி இருக்கலாம் என சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயல்கள் காரணமாக கோவிட் பரிசோதனை, திரிபு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை எனவும் அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு தேவைகளுக்காக சட்டத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுவதால், ஏற்கனவே ஒமிக்ரோன் திரிபு இலங்கைக்குள் பரவியுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
திரிபு பரிசோதனைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் வருவோருக்கும் கோவிட் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை.
இதன் காரணமாக எதிர்காலத்தில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு இலங்கைக்குள் பரவலாம்.
இந்த வைரஸ் திரிபின் அலை அதிகரித்து, அதனை கட்டுப்படுத்த முடியாதபடி தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடினாலேயே புதிய ஒமிக்ரோன் திரிபு இலங்கைக்குள் பரவியுள்ளது என்பதை கண்டறிய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.