நுவரெலியாவில் பல ஆண்டுகால போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு.. புதிய பேருந்து சேவை
டெலிக்ளேர் தோட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களின் பல ஆண்டுகால போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வாக, டெலிகிளையார் தோட்டத்திலிருந்து பத்தனை சந்தி வரையிலான புதிய பேருந்து சேவை இன்று (08) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த தோட்டப் பகுதியில் வசிக்கும் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை தங்களது அன்றாட போக்குவரத்து தேவைகளுக்காக சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இல்லையெனில் அதிக செலவில் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், அவசர நோயாளர் நிலைமைகளில் வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்வதும் பெரும் சவாலாக இருந்து வந்தது.
விசேட ஒத்துழைப்பு
இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையையும் அவர்களது அசௌகரியங்களையும் கருத்தில் கொண்டு இந்த புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பேருந்து சேவைக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் விசேட ஒத்துழைப்பு கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மஞ்சுள சுரவீர ஆராச்சி அவர்களின் தலையீடும் ஆதரவும் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, கொட்டகலை பிரதேச சபையின் உப தவிசாளர், தலவாக்கலை நகர சபை தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் டெலிக்ளேர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது அன்றாட பயண நடவடிக்கைகளை குறைந்த செலவில், எளிதாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.