தனிஸ் அலிக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தனிஸ் அலி எதிர்வரும் 15ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் தனிஸ் அலி கைது
கடந்த ஜூலை 13ஆம் திகதி தேசிய தொலைக்காட்சிக்குள் பிரவேசித்து வன்முறையில் ஈடுபட்டமை, அதன் ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் தனிஸ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்கவிலிருந்து டுபாய் புறப்படவிருந்த விமானத்தினுள் வைத்து, கடந்த 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பிடியாணை உத்தரவு
இதேவேளை, கடந்த ஜூன் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு நிதியமைச்சின் பிரதிநிதிகளை சந்திக்க வந்தபோது நிதி அமைச்சின் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியமை தொடர்பான வழக்குக்காக மன்றில் முன்னிலையாகாமை தொடர்பில் மேற்படி நீதிமன்றால் தனிஸ் அலிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அவர் கடந்த ஜூலை 27ஆம் திகதி நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும்,
ரூபவாஹினிக் கூட்டுத்தாபன வழக்கு தொடர்பில் இன்று வரை (ஆகஸ்ட்1)
விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.