தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் செம்மணியே ஆவணம் - அரசிடம் சிறிநாத் எம்.பி கோரிக்கை
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் மனித என்புத் தொகுதிகள் தமிழ் மக்களுக்கு எதிராகக் காலம் காலமாக அரங்கேற்றப்பட்ட அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் சர்வதேச ரீதியில் உறுதிப்படுத்துவதற்கான மிக முக்கிய வரலாற்று ஆவணமாக மாறியுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விவகாரத்தில் அரசு தீர்க்கமான முடிவை எடுத்துத் தனது நடுநிலைத் தன்மையையும், நீதித் தன்மையையும் உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(23.06.2026) நடைபெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, விசேட பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள் மற்றும் இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான விதிமுறைகள் என்பன மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுயின் மூலம் இதுவரை 400- இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான அறிவியல் ஆதாரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
விசாரணைக்குட்படுத்தப்பட்ட என்புத்தொகுதிகள்
நீதி அமைச்சின் பூரண அனுசரணையோடு இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு தற்போதைய அரசு எடுத்துள்ள முதற்கட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் நன்றியைக் கூறிக்கொள்கின்றோம்.

எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், அதனை மேலும் வலுவுள்ளதாக மாற்றியமைக்கவும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இரகசியமாகப் புதைக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதற்கான அகழ்வுப் பணிகளை அரசு உரிய காலத்தில், துரித கதியில் முன்னெடுக்க வேண்டும்.
காலம் காலமாகத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கும், தமிழ் இனம் எதிர்கொண்ட கொடூரமான இனப்படுகொலையை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கும் செம்மணியில் மீட்கப்படும். இந்த மனித எச்சங்களை மிக முக்கிய சட்ட ஆவணங்களாகக் கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தை மூடி மறைக்காமல், அரசு உறுதியான முடிவை எடுத்துத் தனது நடுநிலைமையையும் நீதி வழங்கும் தன்மையையும் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என இந்த உயரிய சபையில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.