கடும் நெருக்கடியில் பொருளாதாரம்! - இந்தியாவிடம் கடன் கோரும் இலங்கை
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. விலைவாசி விண்ணை முட்டும் அளவில் உள்ளது.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை, இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார் கப்ரால் கருத்து வெளியிடுகையில், அத்தியாவசிய பொருள் இறக்குமதி செய்ய இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலலர் கடன் உதவி பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
உணவு பொருள் இறக்குமதிக்காக மட்டும் இந்த தொகை செலவிடப்படும். இலங்கை தனது கடனை திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீனாவிடம் இருந்து மற்றொரு கடனைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
எனினும், கடன் தொகை இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என கப்ரால் கூறினார். முன்னதாக கடந்த வாரம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இருந்தார்.
இதன்போது சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த இலங்கை ஜனாதிபதி, இலங்கையின் கடனை மறுகட்டமைப்பு செய்தால் அது தங்கள் நாட்டுக்கு பலனுள்ளதாக அமையும் என தெரிவித்திருந்தார்.
