புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்!
இப்போது இலங்கை அரசியலில் புதிய அரசியல் யாப்பு என்ற ஒரு மாயமான் தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு கொண்டிருக்கின்றது.
இலங்கையில் சோல்பெரி அரசியல் யாப்புக்கு பின்வந்த முதலாம், இரண்டாம் குடியரசு யாப்புகள் சிங்கள பௌத்தத்தை முதன்மைப்படுத்தியும், தமிழின விரோதத்தை இலக்காகவும் கொண்டு உருவாக்கப்பட்டன.
அந்த யாப்புக்கள் பதவியில் இருக்கின்ற அரசுத் தலைவரும், நாடாளுமன்றமும் சட்டப் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடக்கூடிய வழிவகைகளைக் கொண்டுடதாக வடிவமைக்கப்பட்டன. தற்போதுதைய இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் இனவாத, சர்வதிகாரப் போக்கு சிந்தனையில் இருந்து வடிவமைக்கப்பட்டது.
தமிழின அழிப்பை முதன்மையாக கொண்டிருந்தது என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வுத்திட்டம் பற்றி தற்போது பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில் அந்த யாப்பின் தொடர்விளை பற்றி மீள்பகுப்பாய்வு செய்வது அவசியமாகிறது.
ஜே.ஆர்.ஆல் உருவாக்கப்பட்ட இன்றைய அரசியல் யாப்பின் போக்கிலிருந்து புதிய மாற்றத்திற்கு செல்ல முடியாத அளவுக்கு அந்த யாப்பு சிங்கள அரசியல் தரப்பிலும், சிங்கள பௌத்த மக்கள் தரப்பிலும், சிங்கள தேசத்தின் ஊடகங்கள் தரப்பிலும், சிங்கள ராஜதந்திர கட்டமைப்பிலும் வலுவான இராட்சத சிங்கள தேசியவாத கருத்துமண்டலத்தை பதிப்பித்துவிட்டது.
சர்வதேச அழுத்தங்கள், நெருகடிகள் வந்தாலும் அந்த கருத்தியல் சிந்தனைப் போக்கில் இருந்து புதிய மாற்றத்திற்கு எந்த ஒரு அரசியல் தலைவர்களும் செல்ல முடியாத கிடுக்குப்பிடிக்குள் சிக்குண்ணச் செய்து(Entanglement) இருக்கிறது.
இந்திய எதிர்ப்பு வாதம்
அதேநேரத்தில் இந்த யாப்பு பௌத்த சிங்கள பேரினவாதத்தை சட்டரீதியாக பாதுகாப்பதும் சிறுபாண்மையினங்கள் சட்டரீதியாக எதனையும் பெறமுடியாதவாறு சட்டத் தடுப்புச்சுவர்களை கொண்டதான ஒரு சக்கர வியூகத்தை(Encirclement) போல இந்த யாப்பு அனைவரையும் இன்றுவரை கட்டிப்போட்டிருக்கிறது.
தேசிய இனப்பிரச்சனைக்கு யாரும் எந்தத்தீர்வும் எட்டமுடியாத அளவு சட்டச் சரத்தக்கள் மூலம் அடைத்து மூடி(Envelopment) யாப்பைவிட்டு யாரும் நகரமுடியாதவாறான இறுக்கமான யாப்பாக செயற்படுகிறது. இனக்குரோதம், இனப்படுகொலைவாதம், இந்திய எதிர்ப்பு வாதம் என்ற அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டு தொடர்ந்து பலமடங்கு வளர்ச்சி அடைந்து இன்று முதிர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்வதே பொருந்தும். இலங்கை அரசியலில் ஜே.ஆர் ஒரு தீவிரமான அரசியல் மாற்றத்தை செய்திருந்தார்.

அது ஒரு தீவிர அரசியல் சர்வாதிகாரத்தை, ராணுவ மயமாக்களை, தீவிரமான இனவாதத்தை ஒன்றிணைத்து அதிதீவிரமானதும், மிகப் பிற்போக்கான ஒரு அரசியல் மாற்றத்திற்கு வழிவகுத்திக்கிறது. அதன் மூலம் ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் தாம் நினைத்ததை நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியலமைப்பை மீறுக்கும், ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும், மனித உரிமைகளை மீறுவதற்குமான வழிவகைகள் இந்த யாப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத, ஆனால் உலக நாடுகளில் காணப்படுகின்ற அரசியல் யாப்புக்களின் கெட்ட ஒவ்வொரு பகுதிகளையும் துண்டு, துண்டாக எடுத்து பொருத்தி ஒரு விசித்திரமான யாப்பாக, ஒரு சர்வாதிகார யாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஜே.ஆர் ரின் அரசியலமைப்பு பற்றி கொள்கை பகுப்பாய்வு செய்த மு.திருநாவுக்கரசு "அரசியல் அமைப்பு ஜேயாரால் ஜேயாருக்காக ஜேயாருடைய" என்ற தலைப்பிட்டு 1994ல் ஆய்வு நூலாக வெளியிட்டிருந்தார். அதில் "ஜே.ஆர் ஏர் பிடித்து உழவனாய் நடித்து சக்கரவர்த்தியாய் வாழ்ந்தார்" என குறிப்பிடிருந்தார்.
அது இன்றைய ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்காவுக்கும் பொருத்தமானது. மேற்படி நூலில் "ஒழுக்கத்தை பின்பற்றும் ஒருவரிடம்தான் ஒழுக்கத்திற்கான விதிகளைப் பற்றிக் கதைக்கலாம், விபச்சாரனிடம் கற்பி நெறியை பற்றிய விதிகளை எப்படி பேச முடியாதோ? அப்படி இலங்கையின் யாப்பின் விதிகளைப் பற்றி பேசுவதில் பொதுவாக அர்த்தமில்லை" எனக் கூறியிருக்கிறார். இலங்கை அரசியல் யாப்பை வைத்துக்கொண்டு இந்த யாப்புக்குள் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வை எட்ட முடியாது என்பதே அந்த நூலின் முடிந்த முடிவு.
அதனை கடந்த 48 ஆண்டுகளாக இந்த யாப்பின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகின்ற உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளின் விளைவே இன்று இலங்கை அரசு தேசிய இனப் பிரச்சனைக்கான ஒரு தீர்வை எட்ட முடியாமலும், இலங்கையின் பொருளாதாரத்தை வளர்த்துச் செல்ல முடியாமலும் இலங்கைத் தீவினை படுமோசமான புதைகுழிக்குள் தள்ளிவிட்டுள்ளது.
இந்த யாப்பில் ஏற்படுத்தப்பட்ட திருத்தச்சட்டங்களை உற்று அவதானித்தால் அங்கே ஜனநாயக மீறல், அரசியலமைப்பு மீறல், சர்வதிகாரம், இனவாதம் என்பவற்றை உள்ளடக்கிய சட்டப்பயங்கரவாத நடவடிக்கைகள் சட்டமூலங்களில் கோலோச்சுவதை காணமுடியும். உதாரனமாக 2ம் திருத்தச் சட்டம் என்பது கட்சி தாவாச் சட்டத்தில் கட்சி தாவுபவர்களை பாதுகாக்கவும், ஆளும் கட்சி தாம் விரும்பியவாறு நாடாளுமன்றத்தில் முடிவுகளை எடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆளும் கட்சியில் இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு திருத்தச் சட்டமாகும்.
திருத்தச் சட்டங்கள்
ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏதேனும் ஒரு வகையில் விலக்கப்பட்டால் அவருடைய பதவி 3 மாதகாலத்திற்குள் முடிவடைந்து விடும். அவ்வாறு பதவி காலியாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பதவியை தொடர்ந்து தக்க வைக்க அரசியலமைப்பின் 161ம் உறுப்புரையின் (ஈ)பந்தியின் (ii)ம் உபபந்தியை நீக்கி நாடாளுமன்றம் வகைசெய்யலாம் என பொருள்பொதிந்த கடந்தகாலத்தையும் உள்ளடக்கிய பயன்கொண்ட சட்டச் சரத்தாக புதிய (ii)ம் பந்தியை அணைத்ததன் மூலம் ஆளும் கட்சியினர் யாரையும் தம்முடன் இணைத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறுதான் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை தமிழரசுக் கட்சியால் பழிவாங்கல்களுக்கு உட்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் 10-02-1979ல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மூன்று மாத காலத்துக்குள் அவருடைய பதவி காலியாவதற்கு முன் அவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காகவே 22- 02-1979ல் 2ம் அரசியலமைகு திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆளும்கட்சிக்கு இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பயன்படுத்தி இராஜதுரையின் பதவியை தக்கவைப்தற்கு நாடாளுமன்றத்தின் ஊடாகவே வழிசெய்யப்பட்டது. அதன்பின்னர்தான் ராஜதுரை 07-03-1979 ல் ஆளும்கட்சியில் இணைந்தார். இது முற்றிலும் கட்சி முறைமைமரபு விரோதச் செயலாகவும், ஜனநாயக விரோதச் செயலாகவுமே இந்த திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விதாசார பிரதிநிதித்துவ தேர்தல் நடைமுறை இருக்கின்ற பொழுது ஒரு தொகுதிவாரி தேர்தலை நடத்துவது எவ்வளவு சிக்கலானது, எவ்வளவு அபத்தமானது. அது ஒரு பெண்ணை ஆண்ணாக்குவதற்கு சமமானது. அதனையும் ஜே ஆர் செய்து காட்டினார்.
அதுதான் 25-02-1983ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 5ம் திருத்தச் சட்டம். இலங்கை அரசியலமைப்பின் ஐந்தாம் திருத்தச் சட்டம் என்பது அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் மீறிய, அரசியலமைப்பு மீறலுக்கும், சர்வததிகாரப் போக்கின் உச்சத்தையும் அதில் காணமுடியும்.
இரண்டாம் குடியரசு யாப்பு நடைமுறையில் இருந்த காலத்தில் 1983ல் ஒரு இடைத்தேர்தல் எவ்வாறு நடத்தப்பட்டது, அதற்கான அரசியல் சூழல், மற்றும் சட்ட பின்னணி என்ன? என்பதுபற்றி ஆய்வதன் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகள் ஜனநாயக மீறல்களை செய்வதில் எத்தகைய ராஜதந்திர நுணுக்கத்தையும், செயற்திறன் முதிர்ச்சியையும் கொண்டுள்ளதனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வரையப்பட்ட அரசியல் யாப்பை எவ்வாறு மீறுவது? அவ்வாறு மீறுவதற்கு எப்படி அரசியல் சாசனத்தையே தமக்கு அரணாக்குவது? என்பதில் கைதேர்ந்த வல்லவர்கள். அந்த அரசியலமைப்பு அரணுக்குள் நின்றுகொண்டு சட்டப்பயங்கரவாதச் செயல்கலான ஜனநாயகமீறல், சட்ட மீறல், மனிதவுரிமை மீறல்களை சட்டத்தின் போர்வைக்குள்ளிருந்தே செய்வதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சட்டப்பயங்கரவாதச் செயல்களுக்கு இந்த யாப்பு திருத்தச்சட்டம் முன்னுதாரணமாகச் செயற்பட்டுள்ளது. 20-10-1982ல் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்த்தனே வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து ஜனாதிபதி 1977 நாடாளுமன்றத்தின் ஆயுள் 1983 ஓகஸ்ட் 4ம் திகதியுடன் முடிவடையும்போது பொதுத் தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்காக 22-12-1982ல் ஒரு கருத்துக்கணிப்பு(Referendum) வாக்கெடுப்பு நடத்தினார்.
சட்ட வரம்பு
அதில் 52% வாக்குகளால் வெற்றியும் பெற்றுக் கொண்டார். அதனையடுத்து அரசியலமைப்பின் 161ம் உறுப்புரையின் (உ) பந்தியை நீக்கி மேலும் ஆறு ஆண்டுகளுக்கு அதாவது 1989 ஒகஸ்ட்4ம் திகதி வரை நீட்டிப்பதான ஒரு பந்தியை இணைத்து காலநீடிப்பை சட்ட வலுவுள்ளதாக்கினார். அதனையே 4ம் திருத்தச்சட்டம் என 23-12-1982ல் பிரகடனப்படத்தப்பட்டது. இதன் மூலம் 1977 தேர்தலில் தாம் பெற்ற 83% நாடாளுமன்ற ஆசனங்களை 52% வாக்களிப்பின் மூலம் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டார்.
இது எத்தகைய ஜனநாயக விரோத செயல் என்பதை ஊகித்துக் கொள்ளக. இதனையடுத்து கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் "வேண்டாம்" என்று வாக்களித்த தொகுதிகளில் ( நாடாளுமன்றத்தை நீட்டிப்பதற்கு எதிராக), ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதி என்பதனால் ஜெயவர்த்தனாவுக்கு தனது , "ஜனநாயக வெளிப்படைத்தன்மையை" காட்டவேண்டிய தேவை எழுந்தது. அதற்காக குறித்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி பதிவி விலகச்செய்தார்.
இது அவருடைய சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்திய செயல். அவ்வாறு கட்டாயப்படுத்தி பதவி விலகச் செய்ததன் மூலம் பதவி காலியாகிய தொகுதிக்கு பதவியில் இருக்கும் கட்சி 30 நாட்களுக்குள் பட்டியல் முறையில் வாரிசையில் உள்ள ஒருவரை பரிந்துரைக்கவில்லை என்றால், இந்த இடத்திற்கு இடைத்தேர்தல்களை நடத்த அனுமதிக்கும் ஒரு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்பட்டது.

அப்போது 1978ம் ஆண்டு யாப்பு நடைமுயில் உள்ளதால் அதில் இடைத்தேர்தல் இல்லை என்பதனால் இப்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1972ம் ஆண்டு யாப்பின் பிரகாரம் தெரிவானவர்கள் என்ற அடிப்படையில் 18 தொகுதிகளில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அந்த 1972யாப்பில் உள்ள விதிகளின்படி இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஒரு சட்ட வரைபை 161வது சரத்தின்(ஈ) பகுதியின் (iii) உப பந்தியைில் திருத்தம் செய்து இதனை 25-02-1983ல் நாடாளுமன்றத்தில் 5வது அரசியலமைப்பு திருத்தமாக நிறைவேற்றினார். அதன் பின்னர் 18மே 1983 இடைத்தேர்தல் நடாத்தப்பட்டது.
ஆனால் இந்த 5ம் திருத்தச்சட்டம் 1977ல் தேர்தலில் தெரிவாகி 1982ல் கருத்துக்கணிப்பு (Referendum) வாக்கெடுப்பின் மூலம் காலநீடிப்பு செய்யப்பட்ட 1989 வரையான நாடாளுமன்ற காலத்திற்குள் மட்டுமே இந்த இடைத்தேர்தலுக்கான திருத்தச்சட்டமூலம் செல்லுபடியாகும். என்ற சட்ட வரம்பு இடப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்க.
ஆகவே இப்போது நடைமுறையில் உள்ள 2ம் குடியரசு யாப்பில் உள்ள 4ம் மற்றும் 5ம் திருத்தச்சட்டத்திற்கு தற்போது எந்த பெறுமானமும் இல்லை. தெற்கில் நாடாளுமன்ற பதவி காலியான இடங்களுக்கு இடைத்தேர்தலை நடாத்திய ஜே.ஆர் 1983 ஆம் ஆண்டு ஜூலை இனப்படுகொலைக்கு பின்னர் வட கிழக்கில் நாடாளுமன்றம் செல்லாது புறக்கணிப்பு செய்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி வெற்றிடமாகியபோது அதற்கான ஒரு இடைத்தேர்தலை நடத்தாமல் 1989ம் ஆண்டு வரை தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமலே நாடாளுமன்றம் இயங்கியது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சிங்கள பௌத்த அரசுக்கு விருப்பமானது எதுவோ அதனையே அரசியலமைப்பில் உள்ளவற்றிலிருந்து நிறைவேற்றவும், அதே நேரம் அரசியலமைப்பில் இல்லாதவற்றை புதிதாக உருவாக்கவும் சிங்களத் தலைவர்களால் முடிகிறது என்பதிலிருந்து சிங்கள அரசியல் எவ்வாறு முன்னேறி செல்கிறது என்பதை உணர முடியும். அதேநேரம் தமிழ் மக்கள் தங்களுடைய தேசிய அவிலாசைகளை அடைவதற்காகவும் அரசியல் அமைப்பில் தங்களுக்கு சமஉரிமை வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிறப்புரிமையான சுயநிர்ணயவுரிமை அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு செல்வதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியினால் எடுக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும் அந்தத் தீர்மானத்தின் அடிப்படையிலான 1977ம் ஆண்டு தேர்தலை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான மக்களாணை வாக்கெடுப்பாகவே தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து பெருவெற்றியீட்டினர். இதனை சகித்துக் கொள்ளமுடியாத சிங்கள தேசத்தின் நாடாளுமன்றம் 1983 ஜூலை படுகொலையுடன் சுயநிர்ணய உரிமை கோருவதற்கு தடை விதிக்கும் 6ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இதன் மூலம் தமிழ் மக்களின் ஜனநாயக குரலை ஒடுக்கிவிட்டது. ஜே ஆர் ஆல் உருவாக்கப்பட்ட சக்கரவர்த்திக்கான யாப்பை தவறு என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல்களில் வாய்கிழியக் கத்தும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பதவிக்கு வந்த பின்னர் இலங்கை ஜனாதிபதி என்ற சிம்மாசனத்தில் அமர்ந்த பின்னர் அந்த சிம்மாசனத்தின் சுகத்திலும் அதன் கதகதப்பிலும் சர்வ வல்லமை வாய்ந்த அதிகாரம் என்ற சொர்க்க இன்பத்தை அனுபவிக்கின்றனர்.
இது ஜே.ஆர் க்கு பின்வந்த பிரேமதாசாவாகட்டும், டிபி விஜயதுங்காவாகட்டும், சந்திரிகாவாகட்டும், ராஜபக்சாக்களாகட்டும் யாரும் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும், இலங்கையின் சிங்கள பௌத்த சர்வததிகார தலைமையை ஒழிக்கவும் யாருமே விரும்பவில்லை. அது இப்போதைய அனுகுமார திசாநாயக்காவுக்கும் அதன் அரசாங்கத்துக்கும் பொருந்தும். ஜே.ஆர் யாரால் ஜே.ஆர் ருக்காக உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு என்பது அன்றைய கால ஜனாதிபதி நாற்காலியில் ஜே.ஆர் அமர்ந்திருந்தார் என்பதனால் ஜே.ஆர் கானது என கொள்ள வேண்டும். அதற்குப்பின் அந்த நாற்காலியில் யார் யாரெல்லாம் அமர்கிறார்களோ அது அவர்களுக்கானதுதான்.
ஆகவே இலங்கையின் அரசியல் யாப்பு என்பது சர்வ வல்லமை வாய்ந்த சர்வதிகார சக்கரவர்த்தியான ஜனாதிபதிக்கு உரித்தானது. அவருடைய கட்டளையை அறுதியும் இறுதியானதுமாகும். இந்த அடிப்படையில் இனவாத அரசியலை முன்னெடுப்பதற்கு ஒரு சர்வ வல்லமை வாய்ந்த தலைவனைத்தான் பௌத்த மகாசங்கமும் விரும்புகிறது.
இந்நிலையில் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. ஜே.ஆர் கட்டமைப்புச் செய்த இந்தக் இனவாத கட்டமைப்பை உடைத்துக் கொண்டு எந்த சிங்கள தலைவரும் வெளியேறுவது என்பதும் இலகுவானது ஒன்றல்ல. பொதுவாக ஒரு அரசியல் யாப்பினை அளவீடு செய்வதற்கு அது நடைமுறை சார்ந்து செயற்படுகின்ற அரசியல் போக்கினை கருத்தில் கொண்டே அளவீடு செய்யப்படும். ஆனால் இலங்கை அரசியல் யாப்பு அவ்வாறானதாக இல்லை இந்த அரசியல் யாப்பின் சரத்துக்கள் ஏன் உருவாக்கப்பட்டுள்ளன? எப்படி எவ்வாறு உபயோகிக்கப்படுகின்றன? என்பதிலிருந்து இலங்கை அரசியல் யாப்பினை புரிந்து கொள்ள முடியும்.
" இலங்கை குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்பட வேண்டும், பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் என இந்த யாப்பின் ஒன்பதாவது சரத்து விவரிப்பதன் மூலம் இலங்கையை ஒரு தனி பௌத்த நாடாக அது பிரகடனப்படுத்துகிறது. அத்தோடு சிங்கள மொழிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சிங்கள பௌத்தர்களை இந்த நாட்டின் முதன்மை குடிகள் என்று யாப்பின் ஊடாக அது வரையறை செய்கிறது.
அந்த வரையறை என்பது இனப்படுகொலையின் கட்டமைக்கப்பட்ட அரசியலமைப்பு வடிவமாக கொள்ளப்பட வேண்டும். இன்று இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற 2ம் குடியரசு யாப்பு என்பது அரசும், அரசாங்கமும் ஜனநாயக மீறல்களை செய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அது இனப்படுகொலைக்கு உறுதுணையாக நின்று அரசை பாதுகாக்கிறது. ராணுவ மயமாக்களை கொண்டுள்ளது. இனப்படுகொலைக்கு ஏதுவானது. தமிழின படுகொலையை இலக்காகக் கொண்டுள்ளது.
தமிழ் இன எதிர்ப்பை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்திய எதிர்ப்பை வளர்ப்பதற்கும் கட்டமைப்பு செய்வதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில்தான் இலங்கை அரசியல் யாப்பின் அனைத்து சரத்துக்களும் உள்ளடக்கி இருக்கிறது. இந்த ஆபத்தான சிந்தனைப் போக்கை முற்றிலும் தவறானது என்ற முடிவுக்கு வந்து அனைத்தையும் மாற்றி அமைத்து, புதிய போக்குக்குச் செல்லக்கூடிய வகையிலும், இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு, தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை முன்வைப்பதற்கான உள்ளடக்கத்தை கொண்டதான ஒரு அரசியலமைப்புத்தான் இப்போது இலங்கை தீவுக்கு தேவையாக உள்ளது.
அவ்வாறு ஒரு அரசியலமைப்பை எந்த அரசாங்கங்கள் வந்தாலும் ஒருபோதும் பாக்க மாட்டார்கள் என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு ஏற்கனவே தமிழ் மக்கள் கண்ட மூன்று அரசியலமைப்புகளில் இருந்து பாடங்களை கட்டி தமிழ் மக்கள் தம்மை அரசரவியல் ரீதியாக தகவமைக்க தவறினால் தமிழினத்தை இலங்கைத் தீவில் காத்திட முடியாது.
தொடரும்……….
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 13 March, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 1 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri