எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் : பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருண கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (10) ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய நிலைமை மிகவும் பாரதூரமானது என எச்சரித்ததுடன், உலகளாவிய சூழல் சீராகும் வரை குடிமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம்..
"இது ஒரு சாதாரணமான சூழல் அல்ல; மிகவும் பாரதூரமான நிலைமை," எனக் குறிப்பிட்ட அவர், பயணங்களைக் கட்டுப்படுத்துமாறும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளைக் கொள்வனவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

அண்மைய எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு, நாடு முழுவதும் மக்கள் மத்தியில் நிலவும் அச்சம் காரணமாக (Panic Buying) அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்தமையே ஒரு முக்கிய காரணமாகும்.
கடந்த சில நாட்களாக மக்கள் பதற்றமடைந்து அதிகளவு எரிபொருளைச் சேமிக்காமல் இருந்திருந்தால், இந்த மாத இறுதி வரையிலாவது பழைய விலையிலேயே எரிபொருளை வழங்கியிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்