இலங்கையிலுள்ள நாய்கள்.. அரசாங்கம் முன்னெடுக்கும் புதிய திட்டம்
வளர்ப்பு நாய்களுக்கான பிரத்யேக தகனச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன் முன்னோடித் திட்டம் வெகுவிரைவில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளர்ப்பு நாய்களுக்கான தகனச்சாலைகள் என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வளர்க்கப்படும் நாய்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியமான முறையில் நடத்துவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று 'மனிதாபிமான விலங்கு மக்கள் தொகை மேலாண்மைக்கான கால்நடை சங்கத்தின்' நிறுவனர் சமித் நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இலட்சக்கணக்கான நாய்கள்
உலகம் முழுவதும் தொடங்கப்பட்ட நாய்களுக்கான சரணாலயங்கள் என்ற கருத்து தற்போது முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்றும், இலங்கையின் சிலாபம், திருகோணமலை மற்றும் அனுராதபுரத்தில் திறக்கப்பட்ட நாய் சரணாலயங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், நாய்களுக்கான தகனச்சாலைகள் என்ற கருத்து அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமானது என்றும், சுடுகாடுகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை விலங்குகளின் நலனை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பல இலட்சம் நாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. இவற்றுள் மூன்று சதவீதம் தெருக்களில் திரியும் நாய்களாகவும், மீதமுள்ளவை வீட்டிற்குள்ளேயோ அல்லது வெளியிலோ வளர்க்கப்படும் நாய்களாகவும் இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.