அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அமெரிக்கா! பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்
அயதுல்லா அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
போர் தொடங்கியபோது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி (86) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், போர் சூழல் காரணமாக அவரது உடல் உடனடியாக அடக்கம் செய்யப்படவில்லை.
ஈரான் குற்றச்சாட்டு
அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் முதல் அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கின. தலைநகர் தெக்ரானில் கமெனியின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியதையடுத்து, அவரது உடல் ஊர்வலமாக ஈராக்கின் கர்பலா நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மதச் சடங்குகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து, இன்று அவரது உடல் ஈராக்கில் இருந்து சொந்த ஊரான ஈரானின் மஷ்ஹத் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்கும் நோக்கில் மஷ்ஹத் நகருக்குச் செல்லும் பாதைகளில் உள்ள இரண்டு பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகர காவல்படை குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், அந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பக்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் பிராந்தியம் முழுவதும் உள்ள மேலும் பல அமெரிக்கத் தளங்கள் குறிவைக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.